ஆன்மிகம்
கோனியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா நடைபெற்ற போது எடுத்த படம்.

தேர் திருவிழாவையொட்டி கோனியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா

Published On 2021-02-17 06:52 GMT   |   Update On 2021-02-17 06:52 GMT
கோவையின் காவல்தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு பூச்சாட்டு விழா நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர்த்திருவிழா 3-ந் தேதி நடக்கிறது.
கோவையின் காவல்தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா நேற்று முன்தினம் முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக நேற்று இரவு 8.30 மணி அளவில் பூச்சாட்டு விழா நடந்தது. இதற்காக பூக்கம்பம் கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின்னர், அந்த கம்பம் கோவிலில் இருந்து வைசியாள் வீதி, கற்பககவுண்டர் வீதி, ராஜவீதி, ஒப்பணக்கார வீதி வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோவிலை வந்தடைந்தது.

அங்கு மீண்டும் பூஜை செய்யப்பட்டு கம்பம் நடப்பட்டது. அதற்கு ஏராளமான பெண்கள் புனிதநீர் ஊற்றி வழிபட்டனர். இதில் கோவில் செயல் அலுவலர் கைலாசமூர்த்தி, உதவி ஆணையர் விஜயலட்சுமி, ரெயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.சண்முகம் உள்பட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வருகிற 22-ந் தேதி கிராம சாந்தி, 23-ந் தேதி இரவு 7.30 மணிக்கு கொடியேற்றம், அக்னிசாட்டு நடைபெறுகிறது. 24-ந் தேதி முதல் மார்ச் 1-ந் தேதி வரை அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகிறார். 2-ந் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர்த்திருவிழா 3-ந் தேதி மதியம் 2 மணியளவில் நடக்கிறது.
Tags:    

Similar News