செய்திகள்
தர்ணாவில் ஈடுபட முயன்ற பெண்.

தஞ்சை ஆத்துப்பாலம் அருகே நடுரோட்டில் அமர்ந்து இளம்பெண் திடீர் தர்ணா

Published On 2020-02-14 12:18 GMT   |   Update On 2020-02-14 12:18 GMT
தஞ்சை ஆத்துப்பாலம் அருகே இன்று மதியம் நடுரோட்டில் அமர்ந்து இளம்பெண் திடீரென தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்:

தஞ்சை ஆத்துப்பாலம் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. எப்போதும் இந்த பகுதி பரபரப்பாக இயங்கும்.

இந்த நிலையில் இன்று மதியம் ஒரு பெண் திடீரென ஆத்துப்பாலம் நடுரோட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட முயன்றார். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த தஞ்சை அனைத்து மகளிர் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்தப் பெண்ணை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த பெண் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த பெருமாள் மனைவி கல்யாணி(வயது 33) என்பதும், அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளதும் தெரியவந்தது.

தொடர்ந்து கல்யாணியிடம் போலீசார் விசாரித்ததில் அவர் கூறியதாவது:-

எனது தாயாரின் வீடு தஞ்சை அண்ணாநகரில் உள்ளது. நான் குடும்பத்துடன் ராசிபுரத்தில் வசித்து வருகிறேன். எனது தாயாருக்கு சேர வேண்டிய இடத்தை உறவினர்கள் சிலர் கொடுக்காமல் அவரை அடித்து துன்புறுத்தி வருகின்றனர்.இது குறித்து நான் போலீசில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் தாயாருக்கு சேர வேண்டிய இடத்தை உறவினர்களிடம் இருந்து பெற்று தர போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

நடுரோட்டில் தர்ணாவில் ஈடுபட்ட முயன்ற பெண்ணால் தஞ்சையில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News