ஆன்மிகம்
திருப்பதி பிரம்மோற்சவம்

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா நாளை தொடங்குகிறது

Published On 2020-09-18 07:52 GMT   |   Update On 2020-09-18 07:52 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நாளை தொடங்கி வருகிற 27-ந்தேதி வரை நடக்கிறது. இந்தாண்டு கொரோனா காரணமாக பிரம்மோற்சவ விழா வாகன சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
திருப்பதி :

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நாளை தொடங்கி வருகிற 27-ந்தேதி வரை நடக்கிறது.

நவராத்திரி பிரம்மோற்சவம் அடுத்த மாதம் 16-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் காலை மற்றும் இரவு நேரங்களில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

இதைக்காண தினமும் லட்சணக்கான பக்தர்கள் நான்கு மாடவீதிகளில் காத்திருந்து தரிசனம் செய்வார்கள். மேலும் வீதியுலாவின் போது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் மற்றும் கலைஞர்களின் கோலாட்டம், மயிலாட்டம் மற்றும் பல்வேறு அவதாரங்களை குறிக்கும் விதமான சாமி வேடமணிந்து நடனம் ஆடுவார்கள்.

இந்தாண்டு கொரோனா காரணமாக பிரம்மோற்சவ விழா வாகன சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

ஆனால் கோவிலில் நடைபெற கூடிய அனைத்து சேவைகளும் வழக்கம்போல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஏழுமலையான் கோவில் முதன்மை அர்ச்சகர் வேணுகோபால தீட்சிதர் கூறியிருப்பதாவது:-

வருடாந்திர பிரம்மோற்சவம் இந்தாண்டு தனிமையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் சம்பங்கி பிரகாரத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் அந்தந்த நாட்களுக்கு ஏற்றார் போல் வாகன சேவையில் அலங்கரிக்கப்படும்.

பின்னர் ஜீயர்களின் திவ்ய பிரபந்த பாராயணம் மற்றும் வேத பண்டிதர்கள் வேத பாராயணம் உள்ளிட்டவை நடத்தப்படும். கொரோனா காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும், பல தேவதைகளை வரவேற்கும் விதமாக சம்பங்கி பிரகாரத்தில் அஷ்டதி பாலகர்களுக்கு வரவேற்பளித்து சாமிக்கு நடைபெறக்கூடிய பிரம்மோற்சவத்தை காணும் விதமாக சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

வருகிற 23-ந்தேதி நடைபெற கூடிய கருட சேவையன்று மூலவருக்கு லட்சுமி ஆரம், சகஸ்ரநாம ஆரம் உற்சவ மூர்த்திகளுக்கு கருட வாகனத்தில் அலங்காரிக்கப்படும்.

சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி அனந்த பத்மநாப சாமி விரதத்தின் போது ரங்கநாயகர் வெள்ளி அண்டாவில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. அதேபோல் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி கோவிலுக்குள் நடத்தப்படும்.

காலை சுப்ரபாதம் முதல் ஏகாந்த சேவை வரை அனைத்து உற்சவங்களும், நெய்வேத்தியம் பிரம்மோற்சவத்தின் போது எவ்வாறு நடத்தப்படுமோ? அதேபோல் இந்தாண்டும் நடத்தப்படும்.

தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரை மற்றும் இரவு 9 மணி முதல் 10 மணி வரை பிரம்மோற்சவ வாகன சேவை கோவிலுக்குள் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரம்மோற்சவ விழாவையொட்டி திருப்பதி முழுவதும் வண்ண வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

4 மாடவீதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் ரங்கோலி கோலங்கள் வரையப்பட்டு அலங்காரம் வளைவுகள் அமைக்கப்பட்டு வருகிறது. திருப்பதி விழாக்கோலம் பூண்டு வருகிறது.
Tags:    

Similar News