செய்திகள்
விவசாயிகள் போராட்டம் - உயர்நீதிமன்ற உத்தரவு என கூறி வைரலாகும் தகவல்
டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்த உயர்நீதிமன்ற உத்தரவு என கூறி வைரலாகும் தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களை விடுவிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜனவரி 26 ஆம் தேதி நடைபெற்ற வன்முறையில் தொடர்பு இருப்பதாக கூறி பல போராட்டக்காரர்களை டெல்லி காவல் துறை கைது செய்து இருக்கிறது.
டெல்லி காவல் துறை கைது செய்த அனைத்து விவசாய நண்பர்களையும் விடுவிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. விவசாயிகள் ஒற்றுமை ஓங்கட்டும். அண்ணாதத்தா நீடுழி வாழட்டும் என இந்தி மொழியில் எழுதப்பட்ட பதிவு பேஸ்புக்கில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.
வைரல் தகவல் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், டெல்லி உயர்நீதிமன்றம் சார்பில் இதுகுறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. இதையே டெல்லி காவல்துறையும் உறுதிப்படுத்தி இருக்கிறது. இதுபோன்ற உத்தரவு வெளியாகி இருப்பின் அது பெரும் கவனத்தை ஈர்த்திருக்கும்.
எனினும், அவ்வாறு எந்த தகவலும் இணையத்தில் வெளியாகவில்லை. அந்த வகையில் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதாக கூறி வைரலான தகவலில் துளியும் உண்மையில்லை என்பது உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.