செய்திகள்
ஜம்மு காஷ்மீர் சட்ட மேலவை

ஜம்மு-காஷ்மீர் சட்ட மேலவை கலைப்பு

Published On 2019-10-17 17:20 GMT   |   Update On 2019-10-17 17:20 GMT
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டதையடுத்து அங்கு 62 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த சட்ட மேலவையை கலைத்து பொது நிர்வாகத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீரில் 1957-ம் ஆண்டு முதல் சட்ட பேரவை மற்றும் சட்ட மேலவை செயல்பட்டு வந்தது. இதற்கிடையில் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது.  அம்மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. 

மேலும், ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு 2019 சட்டத்தின் படி அம்மாநிலத்தின் லடாக் பகுதி சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் ஜம்மு-காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மறுசீரமைப்பு சட்டம் விதி 54-ன் படி, ஜம்மு-காஷ்மீரில் 62 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த சட்ட மேலவையை கலைப்பதற்கான உத்தரவை பொது நிர்வாகத்துறை இன்று வெளியிட்டுள்ளது. 

அதன்படி, சட்ட மேலவையில் பணியாற்றிவந்த 116 ஊழியர்களும் வரும் 22-ம் தேதியில் இருந்து தங்கள் வருகையை பொது நிர்வாகத் துறையிடம் பதிவு செய்ய வேண்டும். மேலும், ஜம்மு-காஷ்மீர் மேலவை செயலாளர் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு காஷ்மீர் சட்ட மேலவை கட்டிடம், பர்னிச்சர், மற்றும் மின் சாதனங்களை எஸ்டேட்ஸ் இயக்குனரிடம் சமர்ப்பிக்க வேண்டும். 

ஜம்மு-காஷ்மீர் மேலவை செயலாளர் தனது கட்டுப்பாட்டில் உள்ள சட்டம் ஒழுக்கு, வணிகம், சட்டசபை விவகாரங்கள் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் சட்டசபை செயலகத்திடம் ஒப்படைக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News