செய்திகள்
சூளகிரி அருகே லாரி மோதி மூதாட்டி பலி
சூளகிரி அருகே லாரி மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
சூளகிரியை அடுத்த கோபசந்திரத்தை சேர்ந்தவர் சின்னப்பா. இவரது மனைவி லட்சுமியம்மா (வயது 65). இவர் நேற்று சுண்டகிரி அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது, குஜராத்தில் இருந்து சென்னைக்கு கெமிக்கல் ஏற்றி வந்த டேங்கர் லாரி, மூதாட்டி மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதற்கிடையே, விபத்திற்கு காரணமான டேங்கர் லாரிக்கு பின்னால் வந்த கார், லாரி மீது மோதாமல் இருக்க டிரைவர் காரை திருப்பினார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியன் மீது மோதி, தரைமட்ட பாலத்தின் தடுப்புச்சுவரின் மீது ஏறி நின்றது.
இதில் காரில் வந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்துக்குள்ளான லாரி, கார் ஆகியவற்றை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.