செய்திகள்
பிரதமர் மோடி

பிரதமர் மோடி தலைமையில் வரும் 4-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்

Published On 2020-11-30 10:27 GMT   |   Update On 2020-11-30 10:27 GMT
பிரதமர் மோடி தலைமையில் வரும் 4-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. வைரசுக்கான தடுப்பூசியை தயாரிக்கும் பணியில் சீரம் இன்ஸ்டிடியூட், பாரத் பயோடெக் உள்ளிட்ட நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. 

கொரோனா வைரஸ் தாக்கம் ஒருபக்கம் நீடித்து வரும் நிலையில் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தலைநகர் டெல்லி நோக்கி பேரணியாக சென்றனர். அவர்கள் டெல்லி எல்லையில் தடுக்கப்பட்டதையடுத்து பரபரப்பு ஏற்பட்டது. 

பின்னர் டெல்லிக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டபோதும் தற்போதுவரை அரியானா-டெல்லி எல்லை பகுதிகளான சிங்கு மற்றும் திக்ரி எல்லைகளில்
அமர்ந்து தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். 5-வது நாளாக போராட்டம் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

விவசாயிகளிடம் டிசம்பர் 3-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்புவிடுத்துள்ளது. அந்த அழைப்பு தொடர்பாக விவசாய சங்கங்களிடம் இருந்து தற்போதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரவில்லை.     

இந்நிலையில், டிசம்பர் 4-ம் தேதி அனைத்துக்கட்சிகள் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லோக்சபா, ராஜ்யசபாவில் இடம்பெற்றுள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் நிலவரம், கொரோனா தடுப்பூசி விவகாரம், வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags:    

Similar News