செய்திகள்
கைது

கடையத்தில் ஜவுளிக்கடையில் சேலை திருடிய 5 பெண்கள் கைது

Published On 2021-05-04 15:48 GMT   |   Update On 2021-05-04 15:48 GMT
தென்காசி மாவட்டம் கடையத்தில் ஜவுளிக்கடையில் சேலை திருடிய 5 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
கடையம்:

தென்காசி மாவட்டம் கடையம் பாரதி நினைவுநகரை சேர்ந்தவர் ஜோசப் ஸ்டாலின் (வயது 62). இவர் அந்த பகுதியில் அம்பை-தென்காசி மெயின் ரோட்டில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.

இவரது கடைக்கு நேற்று காலை 5 பெண்கள் சேலை வாங்குவது போல் வந்து சேலைகளை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் மாலையில் மீண்டும் கைவரிசை காட்டுவதற்கு அவர்கள் ஜவுளிக்கடைக்கு வந்து உள்ளனர். அவர்கள் சேலை திருடும்போது கவனித்த கடைக்காரர் ஜோசப் ஸ்டாலின், பொதுமக்கள் உதவியுடன் அவர்களை கையும், களவுமாக பிடித்தார். பின்னர் அவர்களை கடையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணையில், அந்த பெண்கள் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வாய்க்கால் பகுதி பெருமாள்கோவில் தெருவைச் சேர்ந்த சுப்பையா மனைவி லட்சுமி (42), அய்யாகுட்டி மனைவி பார்வதி (40), நம்பி மனைவி நம்பிகண்ணு (50), பெருமாள் மனைவி சுப்பம்மாள் (70), ராமையா மனைவி ஆச்சியம்மாள் (75) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் ஏற்கனவே இந்த கடையில் 3 முறை வந்து சுமார் 25 பட்டு சேலைகளை திருடிச் சென்றதும் தெரிந்தது.

இதையடுத்து கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 5 பெண்களையும் கைது செய்தனர். இந்த சம்பவம் கடையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News