வழிபாடு
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் தேரோட்டம் நடைபெற்ற காட்சி.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் தேரோட்டம்: தேரை வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்

Published On 2022-02-26 07:57 GMT   |   Update On 2022-02-26 07:57 GMT
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பிரம்மோற்சவ விழாவின் 7-ம் நாளான இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 20-ந்தேதி தொடங்கியது. தினமும் காலையும், மாலையும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்று வருகிறது.

கடந்த 22-ந் தேதி கருடசேவை நடந்தது. 23-ந் தேதி சூரியபிரபை, சந்திரபிரபை புறப்பாடு நடந்தது. 24-ந் தேதி பல்லக்கு நாச்சியார் கோலத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. நேற்று காலை சூர்ணா பிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து பார்த்தசாரதி பெருமாள் ஆனந்த விமானத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பிரம்மோற்சவ விழாவின் 7-ம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. இன்று அதிகாலை 2.15 மணி அளவில் சாமி திருத்தேருக்கு எழுந்தருளினார். காலை 7 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது.

இன்று இரவு 9 மணிக்கு தோட்ட திருமஞ்சனம் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை காலை பல்லக்கில் வெண்ணை தாழி கண்ணன் திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

28-ந்தேதி பகல் 11 மணிக்கு தீர்த்தவாரி உற்சவமும், இரவு கண்ணாடி பல்லக்கு சேவையும் நடக்கிறது. மார்ச் 1-ந்தேதி அவ ரோஹணம், துவாதச ஆராதனம், சப்தா வர்ணம்-சிறிய தேர் நிகழ்ச்சி நடக்கிறது. அத்துடன் விழா நிறைவடைகிறது.

Tags:    

Similar News