அழகுக் குறிப்புகள்
ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் ஆரோக்கிய குளியல் வகைகள்

ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் ஆரோக்கிய குளியல் வகைகள்

Published On 2022-04-05 08:54 GMT   |   Update On 2022-04-05 08:54 GMT
இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஒன்றான ஆயுர்வேதத்தில், உடலின் உள்ளுறுப்புகளைத் தூய்மையாக்கும் வகையில், பல வித குளியல் முறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஒன்றான ஆயுர்வேதத்தில், உடலின் உள்ளுறுப்புகளைத் தூய்மையாக்கும் வகையில், பல வித குளியல் முறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இவற்றை மாதம் ஒரு முறை செய்து வந்தால், ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என்பது ஆராய்ச்சிகள் மூலம் கண்டறியப்பட்ட உண்மையாகும்.

என்னென்ன குளியல் வகைகள் உள்ளன? அவற்றின் பயன்கள் என்ன  என்பதைப் பார்க்கலாம்.

மண் குளியல்:

ஆயுர்வேதத்தில் ஆண்-பெண் உட்பட அனைத்து வயதினருக்கும் பொதுவாகப் பரிந்துரைக்கப்படுவது ‘மண் குளியல்’. இதற்குக் கரையான் புற்று மண் பயன்படுத்தப்படுகிறது. இந்த மண்ணை, நீரில் குழைத்து தலை முதல் கால் வரை உடல் முழுவதும் பூசுவார்கள். பின்பு, ஒரு மணி நேரம் வெயிலில் நிற்க வைப்பார்கள். சேறு காய்ந்தபின் குளித்து விடலாம். இதன் மூலம் ரத்த ஓட்டம் சீராகும். தோல் வியாதிகள் குணமடையும். உடலின் வெப்பம் குறையும். தோலில் உள்ள துளைகளின் அடைப்புகள் அகற்றப்பட்டு, உடலில் உள்ள தேவையற்ற நீர் வியர்வையாக வெளியேறும்.

வாழை இலைக் குளியல்:

நண்பகல் வெயிலில் மொட்டை மாடியில், பாய் விரித்து அதன் மேல் முழு தலைவாழை இலையைப் பரப்பி வைப்பார்கள். இந்த இலை மேல், சம்பந்தப்பட்ட நபரைப் படுக்க வைத்து, காற்று புகாதபடி, மற்றொரு முழு வாழை இலையை வைத்து முழுவதுமாக மூடி கட்டிவிடுவார்கள். இதில் சுவாசிப்பதற்கு மட்டும் சிறு வழியை ஏற்படுத்துவார்கள். 20 நிமிடம் வரை அதே நிலையில் படுத்திருக்க வேண்டும். இதன் மூலம், உடலில் தேங்கியிருக்கும் நாள்பட்ட வியர்வைக் கழிவுகள் வெளியேறும். சுவாசக் கோளாறு, கை, கால் வீக்கம், சிறுநீரகக் கோளாறு, தசை மற்றும் நரம்பு பாதிப்புகள் சீராகும். உடலில் உள்ள கெட்ட நீர் முழுவதும் எளிதில் வெளியேறும்.

நீராவிக் குளியல்:

நீராவி வெளியேறும் ஒரு பெட்டிக்குள் தலைப் பகுதியை வெளியே நீட்டி, உடல் முழுவதும் உள்ளே இருக்குமாறு உட்கார வேண்டும். 20 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை இந்த நீராவிக் குளியல் நடைபெறும். இதன் மூலம், உடல் முழுவதும் உள்ள சருமத்தில் சிறிய துவாரங்கள் திறக்கப்பட்டு, அடைப்புகள் நீங்கும். அந்தத் துவாரங்கள் வழியே தேவையற்ற கழிவுகள் வியர்வையாக வெளியேறும். உடல் வலி, மூட்டு வலி உள்ளவர்களுக்கு இந்தக் குளியல் பரிந்துரைக்கப்படுகிறது.

நீராவிக் குளியல் முடிந்ததும், குளிர்ந்த நீரால் மீண்டும் ஒரு முறை குளிப்பது நல்லது.

இதேபோல் சுளுக்கு, தசைப்பிடிப்பு ஆகிய பிரச்சினைகளுக்காக ஆயில் மசாஜ் செய்து, உடலில் உள்ள வெப்பத்தை வெளியேற்ற முதுகுக்குளியல், உடல் முழுவதும் மிதமான சுடு நீரில் இருக்கும் வகையில் செய்யப்படும் முழுதொட்டிக் குளியல், இடுப்புக்கு வலு சேர்க்கும் வகையில் மேற்கொள்ளப்படும் இடுப்புக் குளியல் என ஆயுர்வேதத்தில் அந்தந்த பிரச்சினைகளுக்கு ஏற்ப பல குளியல் வகைகள் உள்ளன.

இவ்வாறு குளித்த பின்பு, அன்று ஒரு நாள் இயற்கை உணவு மட்டுமே சாப்பிடுவது சிறந்தது. சர்க்கரை சேர்க்காத, காய்கறி மற்றும் பழச்சாறு, சாலட் வகைகள், மோர் ஆகியவற்றை சாப்பிட வேண்டும். உணவில் உப்பு, புளிப்பு, காரம் தவிர்க்க வேண்டும்.
Tags:    

Similar News