செய்திகள்
பல்லடம் அருகே குடிமகன்கள் அட்டகாசத்தால் பொதுமக்கள் பாதிப்பு
பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை அழைத்துவர பெண்கள் செல்லும் போது குடிபோதையில் அவர்களை கிண்டல் கேலி செய்யும் சம்பவம் நடைபெறுகிறது.
பல்லடம்:
பல்லடம் அருகே குடிமகன்கள் அட்டகாசத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சின்ன கோடங்கிபாளையம் ஆறாக்குளம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல்லடம் போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
பல்லடம் அருகே உள்ள ஆறாக்குளம் பிரிவு அருகே அரசு மதுபானக்கடை செயல்படுகிறது. மதுபான கடைக்கு சற்று தொலைவில் தனியார் பள்ளி உள்ளது. இந்தப்பள்ளியில், சின்ன கோடங்கிபாளையம், ஆறாக்குளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆறாக்குளம் பிரிவில் உள்ள பஸ் நிறுத்தத்தில் குடிமகன்கள் மதுபானங்களை வாங்கி வந்து திறந்த வெளியில் அமர்ந்து கொண்டு குடிக்கின்றனர். குடித்து விட்டு ரகளையில் ஈடுபடுகின்றனர். பெரும்பாலும் வெளியூர் நபர்கள் இதில் ஈடுபடுகின்றனர்.
இதனால் அந்தப்பகுதியில் பெண்கள் செல்லவே அச்சமாக உள்ளது. மேலும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை அழைத்துவர பெண்கள் செல்லும் போது குடிபோதையில் அவர்களை கிண்டல் கேலி செய்யும் சம்பவமும் நடைபெறுகிறது.
அந்த இடத்தில் மதுபானம் அருந்தக் கூடாது என எச்சரிக்கை பலகை வைத்தும் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் இடையூறு செய்யும் வகையில் திறந்த வெளியில் மதுபானம் அருந்துபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.