மதுரையில் 15 கிலோ கஞ்சா பறிமுதல்- 4 பேர் கைது
மதுரை:
மதுரை மாநகரில் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவின் பேரில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு கஞ்சா, மது விற்போரை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரை ஆண்டாள்புரம் பகுதியில் உள்ள பாலத்தின் கீழ் சிலர் கஞ்சா விற்பதாக ஜெய்ஹிந்துபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் அந்தப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது போலீசாரை கண்டதும் அங்கு நின்றிருந்த 4 பேர் தப்ப முயன்றனர். போலீசார் விரைந்து செயல்பட்டு அவர்களை பிடித்து சோதனையிட்டனர். அப்போது அவர்கள் பதுக்கி வைத்திருந்த 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் 4 பேரையும் கைது செய்து விசாரித்ததில், அவர்கள் மீனாம்பிகை நகரைச் சேர்ந்த முத்துராமலிங்கம் (வயது 40), கவாத்து திருப்பதி (44), செல்வகணேஷ் (48), ஜீவாநகர் பிரேம்குமார் (43) என தெரியவந்தது.
கஞ்சா எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.