செய்திகள்
குறைந்த அளவே தடுப்பூசி ஒதுக்கீடு-பொதுமக்கள் அதிருப்தி
உடுமலை நகராட்சி கோர்ட்டு வீதி பள்ளிகளில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி இரண்டாம் டோஸ் செலுத்தும் பணி நடந்தது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதில் பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இருப்பினும் தடுப்பூசி தட்டுப்பாட்டால் பல இடங்களில் பொதுமக்கள் ஏமாற்றுத்துடன் திரும்பும் நிலை உள்ளது.
இந்தநிலையில் உடுமலை பகுதியில் பெரியவாளவாடி, எரிசனம்பட்டி, செல்லப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் மற்றும் உடுமலை நகராட்சி கோர்ட்டு வீதி பள்ளிகளில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி இரண்டாம் டோஸ் செலுத்தும் பணி நடந்தது.
ஏராளமானவர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தும் காலக்கெடு நிறைவடைந்து காத்திருக்கும் நிலையில் குறைந்தளவு ஒதுக்கீடு மட்டுமே செய்யப்பட்டிருந்ததால், நகராட்சி பள்ளி உள்ளிட்ட மையங்களில் ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
மேலும் டோக்கன் கிடைக்காதவர்கள் அதிருப்தியடைந்தனர். எனவே கூடுதல் தடுப்பூசி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.