ஆன்மிகம்
சீரடி சாய்பாபா

சீரடியில் பார்க்க வேண்டிய இடங்கள்...

Published On 2019-11-07 09:05 GMT   |   Update On 2019-11-07 09:05 GMT
சீரடியில் சாய்பாபாவுடன் தொடர்புடைய மேலும் சில இடங்கள் உள்ளன. அங்கும் சென்று பார்த்தால்தான் உங்களது சீரடி பயணம் முழுமை பெறும்.
சீரடி தலத்தில் சமாதி மந்திர், குருஸ்தான், லெண்டித் தோட்டம், துவாரகமாயி, சாவடி ஆகிய இடங்களில் தரிசனம் செய்து முடித்ததும் சீரடி பயணம் முடிந்து விட்டதாக நினைக்காதீர்கள். சீரடியில் சாய்பாபாவுடன் தொடர்புடைய மேலும் சில இடங்கள் உள்ளன. அங்கும் சென்று பார்த்தால்தான் உங்களது சீரடி பயணம் முழுமை பெறும்.

மகல்சபாதி இல்லம்

சாய்பாபா வுக்கு எத்தனையோ கோடி பக்தர்கள் உள்ளனர். ஆனால் பாபாவின் முதல் பக்தர் என்ற பெருமையைப் பெற்றவர் மகல்சாபதி. கண்டோபா ஆலயத்தின் பூசாரியாக இருந்த இவர்தான் பாபாவை முதன்முதலில் ‘‘சாயி’’ என்று அழைத்தார் என்பதும், நாளடைவில் பாபாவுக்காக தன் வாழ்க்கையையே மாற்றிக் கொண்டு வறுமையை விரும்பி ஏற்றுக் கொண்டார் என்பதும் உங்களுக்குத் தெரிந்து இருக்கும். பாபா 1918-ம் ஆண்டு தெய்வமான பிறகு சுமார் 4 ஆண்டுகள் சீரடி தலத்தின் மேன்மைக்காக மகல்சாபதி பாடுபட்டார். 1922-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந்தேதி மகல்சாபதி மரணம் அடைந்தார்.

அவரது உடலை வீட்டில் ஒரு அறையில் சமாதி வைத்துள்ளனர். பாபாவுக்கு தன்னலமற்ற சேவை செய்த காரணத்தால் இவரையும் பக்தர்கள் வழிபடுகிறார்கள். மகல்சாபதி வீட்டில் பாபா அணிந்த காலணிகள், பிரம்பு, ஆடைகள், மற்றும் குப்னி ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.

லட்சுமிபாய் ஷிண்டே

பாபா துவாரகமாயி மசூதிக்கு வந்து என்றைய தினம் தங்க தொடங்கினாரோ, அன்று முதல் துவாரகமாயியை சுத்தம் செய்யும் பணியை லட்சுமிபாய் ஷிண்டே ஏற்றுக் கொண்டார். நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்த இவர் பாபாவை வணங்குவதை பிரதானமாக வைத்திருந்தார்.

லட்சுமிபாயிடம் பாபா, எப்போதாவது சாப்பிட உணவு வேண்டும் என்று கேட்பார். அதுவும் குறிப்பிட்டு இந்த வகை உணவுதான் வேண்டும் என்று கேட்பார். சில சமயம் லட்சுமிபாய் சமைத்து கொண்டு வந்து கொடுக்கும் உணவை நாய், பூனை போன்ற பிராணிகளுக்குப் போட்டு விடுவார். லட்சுமிபாயும் அதை கண்டு கொள்ள மாட்டார்.

பாபா சீரடிக்கு வந்த தொடக்க நாட்களில் அவருக்கு உணவு கொடுக்க பல பெண்கள் மறுத்துள்ளனர். ஆனால் அவரது மகிமை தெரிந்த பிறகு பலரும் போட்டி போட்டுக் கொண்டு பாபாவுக்கு உணவு கொடுத்தனர். பாபா தினமும் 5 வீடுகளுக்கு சென்று பிச்சை எடுத்து சாப்பிடுவதையே வழக்கமாக கொண்டிருந்தார். ‘‘பசிக்கு உணவு அளிப்பவர்கள் கடவுளுக்கு நைவேத்தியம் செய்கிறார்கள்’’ என்று அர்த்தம் என பல தடவை பாபா கூறியுள்ளார்.

சாய்பாபாவிடம் லட்சுமிபாய் ஷிண்டே எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் சேவை செய்து வந்தார். இதனால் அவர் மீது பாபாவுக்கு பாசம் அதிகம் இருந்தது. தனது இறுதி காலம் நெருங்கி விட்டதை உணர்ந்த பாபா ஒருநாள் லட்சுமிபாய் ஷிண்டேயை அழைத்தார். அவரிடம் ஒரு ரூபாய் நாணயமாக 9 நாணயங்களை பாபா எடுத்துக் கொடுத்தார்.

‘‘இதை வைத்துக் கொள்’’ என்று கூறி ஆசீர்வதித்தார். பாபா தன் பக்தர்களில் ஒருவருக்கு செய்த கடைசி உதவி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய சிறப்புடைய லட்சுமிபாய் ஷிண்டே வீடும் சீரடி தலம் அருகிலேயே உள்ளது. லட்சுமிபாய் ஷிண்டே மரணம் அடைந்ததும், அவர் உடலை அவரது வாரிசுகள் வீட்டிலேயே அடக்கம் செய்து சமாதி கட்டி வைத்துள்ளனர்.

மேலும் பாபா கொடுத்த 9 நாணயங்களையும் அவர்கள் அங்கு பத்திரப்படுத்தி வத்துள்ளனர். சீரடிக்கு செல்பவர்கள் மறக்காமல், தவறாமல் லட்சுமிபாய் ஷிண்டே வீட்டுக்கு சென்று விட்டு வரலாம். 
Tags:    

Similar News