செய்திகள்
சிதிலமடைந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம்- சீரமைக்க கோரிக்கை
பூதலூர் அருகே சிதலமடைந்த நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்காட்டுப்பள்ளி:
தஞ்சை மாவட்டத்தில் பூதலூர் ஒன்றியத்தில் விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் நிறைந்த கிராமம் மாரனேரி. இந்த கிராமத்தின் பிரதான இடத்தில் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் 2002-ம் ஆண்டு கட்டப்பட்டது. தற்போது இந்த அலுவலகத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது. மேலும் சுவர்கள் உப்பு அரித்து செங்கற்கள் வெளியே தெரியும் வகையில் உள்ளது.
கிராம நிர்வாக அலுவலகத்தின் முன்புறம் உள்ள தூணின் அடிப்பகுதி பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. பூதலூர் ஒன்றியத்தில் பெரும்பாலான கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள் இதே நிலையில் உள்ளது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் கிராம நிர்வாக அலுவலர்கள் அந்தந்த கிராமங்களிலேயே தங்கி பணியாற்ற வேண்டும் என்ற விதி காற்றில் பறக்க விடக் கூடிய சூழ்நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் சிதிலமடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடங்களை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.