ஆன்மிகம்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை நிறைவு

Published On 2020-08-17 08:51 GMT   |   Update On 2020-08-17 08:51 GMT
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 12 நாட்கள் நடைபெற்று நடந்த இந்த ஆடி களபபூஜை நிறைவடைந்தது. இதில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் 12 நாட்கள் களபபூஜை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆடி களபபூஜை கடந்த 3-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. இதையொட்டி தினமும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு பல வகையான வாசனை திரவியங்கள் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சந்தனம், களபம், பச்சை கற்பூரம், அக்கி, இக்கி, கோரோசனை, ஜவ்வாது, பன்னீர் போன்ற வாசனை திரவியங்களை கலந்து வெள்ளிக்குடத்தில் நிரப்பி வைத்து பூஜை செய்து அம்மனுக்கு களப அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து, அம்மனுக்கு வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரத்துடன் சிறப்பு தீபாராதனையும் நடந்தது. 12 நாட்கள் நடந்த இந்த ஆடி களபபூஜை நேற்றுடன் நிறைவடைந்தது. இதையொட்டி நேற்று காலை “அதிவாசஹோமம்“ என்ற பிரமாண்டமான யாகம் நடந்தது. இந்த யாகத்தை கோவில் மேல்சாந்திகள் மணிகண்டன்போற்றி, ராதாகிருஷ்ணன்போற்றி, விட்டல்போற்றி, பத்மநாபன்போற்றி ஆகியோர் நடத்தினர். இதில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணைஆணையர் அன்புமணி, கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவில் மேலாளர் ஆறுமுகநயினார் ஆகியோர் செய்து இருந்தனர்.
Tags:    

Similar News