பெண்கள் உலகம்
பெண்களுக்காக அரசு வழங்கும் கடன் திட்டங்கள்

பெண்களுக்காக அரசு வழங்கும் கடன் திட்டங்கள்

Published On 2022-04-07 05:32 GMT   |   Update On 2022-04-07 09:18 GMT
சுய தொழில் மற்றும் ஸ்டார்ட் அப் என்ற தொடக்க நிலை நிறுவனங்கள் தொடங்கும் பெண்களுக்கு அரசாங்கம் பல்வேறு கடன் திட்டங்கள் மூலம் நிதி உதவிகளை அளிக்கிறது. அவை பற்றிய விவரங்கள்..
பிரதான் மந்திரி முத்ரா

சிறு நிறுவனம் அழகு நிலையம், தையல் கடை, டியூசன் மையம் ஆகியவற்றுக்கும், மகளிர் குழுவினருக்கும், குறு அலகுகள் வளர்ச்சி மற்றும் மறு நிதி அளிப்பு நிறுவனம் ( முத்ரா ) என்ற அமைப்பின் தலைமையில் இந்த கடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. உற்பத்தி, வர்த்தகம் மற்றும் சேவை ஆகிய 3 பிரிவுகளின் கீழ் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை கடன் தொகையும், 11 ஆண்டுகள் வரை கடனை திருப்பி செலுத்துவதற்கான காலத்தவணையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஸ்டாண்ட் அப் இந்தியா

இந்திய சிறு தொழில் துறை மேம்பாட்டு வங்கி தலைமையில் ஸ்டாண்ட் அப் இந்தியா என்ற கடன் திட்டத்தின் மூலம் உற்பத்தி வர்த்தகம் மற்றும் சேவைத்துறை நிறுவனங்களுக்கு ரூ. 10 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை கடன் வழங்கப்படுகிறது. கடனை 7 ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்தவேண்டும்.

ஸ்த்ரீ சக்தி

பாரத ஸ்டேட் வங்கி இந்த கடன் வசதியை வழங்குகிறது. கடன் பெறுவோர் தமது வணிய நிறுவனத்தின் உரிமையில் 51 சதவிகித பங்குகளை கொண்டிருப்பதுடன், அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டங்களிலும் பங்கேற்றிருக்க வேண்டும். கடன் தொகை ரூ. 2 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால் வட்டி விகிதத்தில் 0.50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்.

உத்யோகினி

வேளாண்மை, சில்லரை விற்பனை மற்றும் சிறு, குறு வணிக நிறுவனங்களை நடத்தும் பெண்களுக்கு பஞ்சாப் மற்றும் சிந்து வங்கிகள் இந்த கடனை அளிக்கின்றன. 18 வயது முதல் 45 வயதிற்குட்பட்ட பெண்கள் அதிகபட்சம் ரூ. 1 லட்சம் கடன் பெற முடியும்.

அன்னபூரணா

பேக்கிங் செய்யப்பட்ட உணவு, நொறுக்குத்தீனி ஆகியவற்றை விற்பனை செய்யும் கேட்டரிங் துறை பெண் தொழில் முனைவோர்களுக்கு இந்த கடன் திட்டம் மூலம் மைசூரு மாநில வங்கி ரூ. 50 ஆயிரம் நிதி உதவி அளிக்கிறது. அதை 36 மாதங்களுக்கு மாதாந்திர தவணையாக திருப்பி செலுத்தலாம்.

சென்ட் கல்யாணி

குடிசைத்தொழில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், சுய தொழில் செய்பவர்கள் விவசாயம் மற்றும் அதன் சார்பு தொழில்கள், சில்லரை வர்த்தகம் ஆகியவற்றுக்கு இணை பாதுகாப்பு அல்லது உத்தரவாதம் இல்லாமல் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி இந்த கடனை அளிக்கிறது. இந்த திட்டத்தில் அதிக பட்ச கடன் தொகை ரூ. 1 கோடி ஆகும். இத்திட்டத்தில் கடனுக்கான செயலாக்க கட்டணம் கிடையாது.
Tags:    

Similar News