செய்திகள்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
பிரிந்து சென்ற கணவரை சேர்த்து வைக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றார்.
திருவண்ணாமலை:
தண்டராம்பட்டு தாலுகா மோத்தக்கல் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி பழனியம்மாள் (வயது 37). இவர் நேற்று மதியம் சுமார் 1 மணி அளவில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தனது மகளுடன் வந்திருந்தார். அப்போது அவர் கலெக்டர் கார் நிறுத்தும் போர்டிகோ அருகில் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.
அப்பகுதியில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் உடனடியாக அவரிடமிருந்து மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்து அவர் மீது தண்ணீர் ஊற்றினர். பின்னர் பழனியம்மாளிடம் விசாரணை நடத்தினர்.
குடும்ப பிரச்சினை காரணமாக தனது கணவர் தன்னை பிரிந்து சென்று விட்டதாகவும், அவரை தன்னுடன் சேர்த்து வைக்குமாறும் அவர் கூறியதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனர். தொடர்ந்து இது குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் சிறிது நேரம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.