செய்திகள்
தற்கொலை

குலசேகரம் அருகே திருமணமான 10 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை

Published On 2019-11-09 09:06 GMT   |   Update On 2019-11-09 09:06 GMT
குலசேகரம் அருகே திருமணமான 10 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவட்டார்:

குலசேகரத்தை அடுத்த தாழமூட்டுவிளை, அயக்கோடு பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 42). ஆட்டோ டிரைவர்.

மகேசுக்கும் கேரள மாநிலம் எரிமேலி பகுதியை சேர்ந்த சோபனா (40) என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த பின்பு சோபனா, அயக்கோட்டில் உள்ள கணவர் வீட்டில் தங்கி இருந்தார். ஆரம்பத்தில் சுமுகமாக சென்ற இவர்களின் இல்லற வாழ்க்கையில் சமீபத்தில் பிரச்சினை ஏற்பட்டது.

கணவன்- மனைவி இருவருக்கும் இடையே கடந்த சில வாரங்களாக குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சோபனா மனம் உடைந்து காணப்பட்டார். மகேஷ் நேற்றிரவு மார்த்தாண்டம் பகுதிக்கு சவாரிக்கு சென்றார்.

அங்கிருந்து இரவு 12 மணி அளவில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் சமையல் அறையில் சோபான தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

அதிர்ச்சி அடைந்த மகேஷ் இது பற்றி குலசேகரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

மேலும் திருமணம் ஆன 10 மாதத்தில் சோபனா தற்கொலை செய்ததால் இது பற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து தாசில்தார் சுப்பிரமணியம் மற்றும் தக்கலை ஆர்.டி.ஓ. சரண்யா  ஆகியோர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News