உள்ளூர் செய்திகள்
மர்டர் மணிகண்டனை செல்போனில் திட்டியதால் பாம் ரவி கொலை செய்யப்பட்டாரா? புதிய தகவல்கள்
ஜெயிலில் இருந்த மர்டர் மணிகண்டனை செல்போனில் ஆபாசமாக திட்டியதால் பாம் ரவி கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
புதுச்சேரி:
புதுவை வாணரப்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி பாம் ரவி மற்றும் அவரது நண்பர் அந்தோணி ஆகியோர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24&ந்தேதி நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர்.
இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் திப்ளானின் கொலைக்கு பழிக்குப்பழியாக சிறையில் உள்ள வினோத்,தீன் ஆகியோரின் தூண்டுதலின்பேரிலேயே இந்த கொலை நடந்தது தெரியவந்தது.மேலும் கொலைக்கு உதவியதாக வினோத்தின் தாய் ரமணி உள்பட 17 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கொலையில் தொடர்புடைய கூலிப்படையினரையும்,கொலைக்கு பிரான்சிலிருந்து பண உதவி செய்தவரையும் கைது செய்யும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இந்த கொலையில் சிறையில் இருக்கும் பிரபல ரவுடியான மர்டர் மணிகண்டன் சம்பந்தப்பட்டிருப்பது.விசாரணையில் தெரியவந்தது.இதற்காக முதலியார்பேட்டை போலீசார் புதுவை கோர்ட்டில் அனுமதி பெற்று 2 நாட்கள் விசாரணை நடத்த மர்டர் மணிகண்டனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காவலில் எடுத்தனர்.
விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானதாக கூறப்படுகிறது.அதன் விபரம் வருமாறு:-
மர்டர் மணிகண்டனிடம் வினோத்,தீன்,பாம் ரவி ஆகியோர் கூட்டாளிகளாக இருந்துள்ளனர்.பின்னர் மர்டர் மணிகண்டனுக்கும், பாம் ரவிக்குமிடையே யார் பெரியவர் என்ற பிரச்சினை ஏற்பட்டதையடுத்து தனித்தனி கோஷ்டிகளாக செயல்பட்டு வந்தனர்.
அதன்பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த பாம் ரவி தனக்கென ஆதரவாளர்களை திரட்டி அவர்கள் மூலம் மாமூல் வசூலிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார்.ஒரு கட்டத்தில் மணிகண்டனை செல்போனில் தொடர்பு கொண்டு அவரை பாம் ரவி ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது.மேலும் மர்டர் மணிகண்டன் ஓரு ரவுடியின் மனைவியிடம் நெருக்கமாக பழகி வந்ததாக தெரிகிறது.இதனை பாம் ரவி கண்டித்து செல்போனில் திட்டியதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மர்டர் மணிகண்டன் பாம் ரவியை கொலை செய்ய திட்டமிட்டு அதனை தனது கூட்டாளிகளிடம் கூறியுள்ளார்.இதன் பின்னரே இந்த கொலை சம்பவம் நடந்ததாக தெரிகிறது. விசாரணை முடிந்து மணிகண்டனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் காலாப்பட்டு சிறையில் அடைக்கின்றனர்.