செய்திகள்
பிரியங்கா ரெட்டி - எரிக்கப்பட்ட உடல் கிடந்த இடம்

பிரியங்கா கற்பழிப்பு விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்வதில் மெத்தனம் - 3 போலீசார் சஸ்பெண்ட்

Published On 2019-12-01 06:44 GMT   |   Update On 2019-12-01 06:44 GMT
ஐதராபாத் பெண் டாக்டர் பிரியங்கா ரெட்டி கற்பழித்து, கொல்லப்பட்ட விவகாரத்தில் உடனடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கத் தவறிய 3 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகர்ப் பகுதியில் உள்ள டோல்கேட் அருகே, புதன்கிழமை இரவு கால்நடை பெண் டாக்டர் பிரியங்கா ரெட்டி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ஷாட்நகர் அருகேயுள்ள டோல்கேட் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில்  பதிவான லாரி எண்களை அடிப்படையாக வைத்து லாரி டிரைவர் முகமது பாஷா, சிவா, நவீன், சென்னகேசவலு ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.  

இவர்கள் பிரியங்கா ரெட்டியை திட்டமிட்டு காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து, கொன்று  பின்னர் அவரது உடலை மண்எண்ணெய் ஊற்றி எரித்தது தெரியவந்தது.



இதற்கிடையில், நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரியங்காவின் தங்கை பவ்யா கூறுகையில், ’போலீஸ் நிலையங்களுக்கு மாறி, மாறி அலைந்ததிலேயே 3 மணி நேரம் வீணாகி விட்டது. போலீசார் நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக நடவடிக்கைகளில் இறங்கி இருந்தால் என் அக்காவை காப்பாற்றி இருக்கலாம்’ என தெரிவித்திருந்தார்.

சம்பவம் நடந்த இடம் தங்களது காவல் நிலைய எல்லைக்குள் வரவில்லை என்று போலீசார் அலைக்கழித்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலயில், பிரியங்கா காணாமல் போனதாக அவரது தாயார் அளித்த புகாரை உரிய நேரத்தில் பதிவு செய்து முதல் தகவல் அறிக்கை தயாரிக்காமல் மெத்தனமாக இருந்ததற்காக ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் இரு போலீசார் நேற்று பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக சைபராபாத் பகுதி போலீஸ் கமிஷனர் சஜ்ஜனார் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற சம்பவங்களில் புகார்கள் வந்தால் காவல் நிலைய எல்லைகளை கடந்து உடனடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
Tags:    

Similar News