செய்திகள்
கோப்புப்படம்

கொரோனாவை தடுக்க அவசர பயன்பாடாக சீனாவில் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி

Published On 2020-11-21 18:51 GMT   |   Update On 2020-11-21 18:51 GMT
சீனாவில் கொரோனாவை தடுப்பதற்காக, அவசர பயன்பாடாக சைனோபார்ம் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியை கிட்டத்தட்ட 10 லட்சம் பேருக்கு செலுத்தி உள்ளனர்.
பீஜிங்:

குழந்தையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிய கதை என்ற சொலவடை தமிழ்நாட்டில் உள்ளது.

இதே போன்றுதான் சீனாவின் செயலும் அமைந்துள்ளது.

கொரோனா வைரசை உலகமெங்கும் அளித்து, பெருத்த உயிர்ச்சேதத்துக்கும், பொருள் சேதத்துக்கும் காரணமாகி நிற்பது சீனாதான்.

இப்போது அந்த சீனாவே கொரோனா வைரசை தடுப்பதற்கான தடுப்பூசியை தயாரித்து வியாபாரம் செய்யவும் எத்தனித்து கொண்டிருக்கிறது. இந்த வகையில், அங்கு 4 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு அவற்றின் இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனைகள் நடந்து வருகின்றன.

குறிப்பாக சீனாவின் தேசிய மருந்து நிறுவனமான சைனோ பார்ம், 2 தடுப்பூசிகளை உருவாக்கி பல நாடுகளில் சோதித்து வருகிறது.

கடந்த ஜூலை மாதம் முதல் சைனோபார்ம் நிறுவனம், தனது தடுப்பூசியை அரசு ஊழியர்கள், சர்வதேச மாணவர்கள், வெளிநாடுகளுக்கு செல்லும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு செலுத்தி வருகிறது என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது.

இதுகுறித்து சைனோபார்ம் நிறுவனத்தின் தலைவர் லியு ஜிங்ஜென் நிருபர்களிடம் கூறியதாவது:-

அவசர பயன்பாடு என்ற வகையில் சோதனை ரீதியில் ஏறத்தாழ 10 லட்சம் பேருக்கு எங்கள் தடுப்பூசியை போட்டு இருக்கிறோம். இந்த தடுப்பூசியினால் மிக கடுமையான பாதிப்பு ஏற்பட்டது என்று ஒரு புகார் கூட இதுவரை வரவில்லை. ஒரு சிலருக்கு மட்டும் லேசான அறிகுறிகள் இருப்பது தெரிய வந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

இருப்பினும், இந்த தடுப்பூசியின் செயல்திறனுக்கான எந்த தெளிவான மருத்துவ ஆதாரங்களும் இதுவரை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விட்டதால் அந்த நாடு உருவாக்கியுள்ள தடுப்பூசிகள் பெரும்பாலும் வெளிநாடுகளில் பரிசோதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

சைனோ பார்ம் நிறுவனத்தை பொறுத்தமட்டில் 2 தடுப்பூசிகளை உருவாக்கி அதன் இறுதிக்கட்ட பரிசோதனையை ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன், எகிப்து, ஜோர்டான், பெரு மற்றும் அர்ஜெண்டினா ஆகிய நாடுகளில் சோதித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News