கம்பத்தில் குடி போதையில் வாலிபர் வெட்டி கொலை
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் விவேகானந்தர் தெருவைச் சேர்ந்த சுரேஷ்குமார் மகன் தினேஷ் (வயது 20). இவர் நேற்று இரவு அதே பகுதியில் ரத்த வெள்ளத்தில் உடலில் வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார்.
இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் ஆம்புலன்ஸ் மூலம் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே தினேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து கம்பம் வடக்கு போலீசார் தனிப்படை அமைத்து குரங்குமாயன் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை தேடி வருகின்றனர்.மணிகண்டன் சிக்கினால்தான் கொலையில் வேறு யாரும் சம்மந்தப்பட்டுள்ளார்களா? என்பது தெரிய வரும் முதல் கட்டவிசாரணையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை நடந்தது தெரிய வந்தது.
கம்பம் பகுதியில் மது மற்றும் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகவே கொலை, கொள்ளை உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் அரங்கேறி வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.