செய்திகள்
ஸ்புட்னி-வி தடுப்பூசி போட்டுக்கொண்ட அதிகாரி

ஸ்புட்னிக்-வி தடுப்பூசி போடும் பணி தொடங்கியது- ஒரு டோஸ் விலை 995 ரூபாய்

Published On 2021-05-14 09:18 GMT   |   Update On 2021-05-14 09:18 GMT
இந்தியாவில் தயாரித்து விநியோகம் செய்யும்போது ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மருந்தின் விலை மிகவும் மலிவாக இருக்கும் என ரெட்டிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐதராபாத்:

இந்தியாவில் தற்போது  சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட், பாரத் பயோடெக்  நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. மூன்றாவதாக ரஷியா தயாரித்துள்ள ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு  இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதியளித்தது.

ரஷ்யாவின் ரஷிய நேரடி முதலீட்டு நிறுவனம், தொற்றுநோய்வியல், நுண் உயிரியலுக்கான காமாலியா தேசிய ஆய்வு நிறுவனம் தயாரித்துள்ள ஸ்புட்னிக் தடுப்பூசியை இறக்குமதி செய்து விநியோகம் செய்யவும், இந்தியாவில் உற்பத்தி செய்யவும் டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரிஸ் மருந்து நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. 



அவசர தேவைக்காக ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை பயன்படுத்திக்கொள்ள டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்துக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு  அனுமதி வழங்கியது. இதையடுத்து ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இறக்குமதி செய்தது. முதற்கட்டமாக கடந்த 1ம் தேதி 1.5 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வந்தடைந்தன. மேலும் பல லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வர உள்ளன. அதேபோல் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் உள்ளூர் தயாரிப்பு பணிகளும் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணியை ரெட்டிஸ் நிறுவனம் இன்று தொடங்கியது. அத்துடன் தடுப்பூசிக்கான விலையையும் ரெட்டிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஒரு டோஸ் மருந்து ரூ.995.40 (ரூ.948+5 சதவீதம் ஜிஎஸ்டி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்புட்னிக் தடுப்பூசி அடுத்த வாரம் சந்தைக்கு வர வாய்ப்பு உள்ளது என மத்திய அரசு கூறி உள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட மருந்துக்கு 5 சதவீத ஜிஎஸ்டியுடன் சேர்த்து இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரித்து விநியோகம் செய்யும்போது விலை மிகவும் குறைவாக இருக்கும் என ரெட்டிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள இரண்டு தடுப்பூசிகளை விட ஸ்புட்னிக்-வி தடுப்பூசியானது அதிக செயல்திறன் (91.6 சதவீதம்) கொண்டது. ஸ்புட்னிக்-வி தடுப்பூசியையும் இரண்டு டோஸ்கள் செலுத்த வேண்டும். திரவ மற்றும் பவுடர் வடிவில் இந்த மருந்து கிடைக்கிறது. திரவ வடிவில் உள்ள மருந்தை மைனஸ் 18 டிகிரி செல்சியஸ் என்ற குளிர்நிலையிலும், பவுடர் வடிவிலான மருந்தை 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் குளிர்நிலையிலும் பாதுகாக்க வேண்டும். 
Tags:    

Similar News