செய்திகள்
தீக்குளிப்பு

தந்தை கைதானதால் முத்தாண்டிக்குப்பம் போலீஸ் நிலையம் முன்பு டிரைவர் தீக்குளிப்பு

Published On 2020-01-10 14:18 GMT   |   Update On 2020-01-10 14:18 GMT
தந்தை கைதான மனவேதனையில் முத்தாண்டிக்குப்பம் போலீஸ் நிலையம் முன்பு டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றார்.
பண்ருட்டி:

பண்ருட்டி அடுத்த முத்தாண்டிக்குப்பம் அருகே உள்ள சொரத்தங்குழியை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் அனந்தராமன் (வயது 27). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அனந்தராமன் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை அவர் முத்தாண்டிக்குப்பம் போலீஸ் நிலையம் முன்பு வந்தார். பின்னர் அவர் ஒரு கேனில் கொண்டு சென்ற பெட்ரோலை, தன் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில், அனந்தராமன் போலீஸ் நிலையத்துக்குள் ஓட முயன்றார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் போலீசார், அனந்தராமனை தடுத்து, அவரது உடலில் எரிந்த தீயை அணைத்தனர். இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

உள்ளாட்சி தேர்தல் முன்விரோதத்தால் ஹாலோ பிளாக் விற்பனையாளரை எரித்துக் கொல்ல முயன்ற வழக்கில் ஜெயராமன் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் தனது தந்தை கைதான மனவேதனையில் அனந்தராமன் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் நிலையம் முன்பு டிரைவர் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News