செய்திகள்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

14 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் உதவி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Published On 2019-10-06 11:14 GMT   |   Update On 2019-10-06 11:14 GMT
பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 14 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை:

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை விண்ணவனூரை சேர்ந்த பச்சையப்பன் கிணறு ஆழப்படுத்தும் பணியின் போது, கயிறு அறுந்து விழுந்து உயிரிழந்தார்.

அரக்கோணம் பள்ளூரை சேர்ந்த ரஜினி மற்றும் அவரது மகன் தினேஷ் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.

அல்லப்பாளையத்தைச் சேர்ந்த முருகேசன் மற்றும் அவரது மகள் செல்வி கவுரி, தங்கராஜ் என்பவரின் மகன் செல்வன் பிரதீப்குமார் ஆகிய மூன்று பேரும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

அணைக்கட்டு கே.ஜி ஏரியூரை சேர்ந்த வேல் முருகன் என்பவரின் இரண்டு குழந்தைகள் ஹரிணி மற்றும் பிரித்திகா ஆகிய இருவரும் குட்டையில் தேங்கியிருந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

பந்தலூர் வட்டம், நெல்லியாளம் கிராமத்தைச் சேர்ந்த ‌ஷக்கீர் என்பவர் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். விளவங்கோடு காட்டுவிளையை சேர்ந்த சிபின் கடலில் குளிக்கச் செல்லும் போது, எதிர்பாராத விதமாக கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார்.

சாத்தூர் சின்னக்காமன்பட்டியை சேர்ந்த கவுரி சாலை விபத்தில் உயிரிழந்தார். சாத்தூர், ஓ.மேட்டுப் பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுப்புராஜ் குளிக்கச் சென்றபோது, நீரில் மூழ்கி உயிரிழந்தார்,

உடுமலைப் பேட்டையை சேர்ந்த சம்பத்குமார் மற்றும் அவருடைய மனைவி பேபிகமலம் ஆகிய இருவரும் சாலை விபத்தில் உயிரிழந்தார்கள் என்ற செய்தியை அறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன்.

மேற்கண்ட சம்பவங்களில் உயிரிழந்த 14 நபர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 1 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News