உள்ளூர் செய்திகள்
கிறிஸ்துவ தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
ஈஸ்டர் பண்டிகை- கோவை தேவாலயங்களில் இன்று சிறப்பு வழிபாடு
கோவை:
இயேசு பிரான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாள் இன்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி சர்ச்சுகளில் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு அடுத்து கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகை ஈஸ்டர்.
சிலுவையில் அறையப்பட்டு, கல்லறையில் அடைக்கப்பட்ட இயேசுபிரான் 3ம் நாள் அதில் இருந்து உயிர்த்தெழுந்தார். இந்த நாளே ஈஸ்டர் திருநாளாக கொண்டாடப்படுகிறது. கிறிஸ்தவர்கள் அனுசரித்த 40 நாள் நாள் தவக்காலத்தின் முக்கியமான நாளாகவும், ஈஸ்டர் கருதப்படுகிறது. இந்த திருநாள் இன்று கொண்டாடப்பட்டது.
கோவையில் உள்ள தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு இயேசு கிறிஸ்து உயிர்த்-தெழுந்த நிகழ்வு காட்சிப்படுத்தப்பட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கோவை டவுன்ஹாலில் உள்ள புனித மிக்கேல் அதிதூதர் தேவாலயத்தில் கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் சிறப்பு வழிபாடு நடந்தது.
காட்டூர் கிறிஸ்து அரசர் ஆலயம், காந்திபுரம் புனித பாத்திமா அன்னை ஆலயம், புலியகுளம் அந்தோணியார் ஆலயம், ராமநாதபுரம் உயிர்த்த இயேசு ஆண்டவர் ஆலயம், போத்தனூர் புனித சூசையப்பர் ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
கார்மேல் நகர் கார்மேல் அன்னை ஆலயம், கோவைப்புதூர் குழந்தை இயேசு ஆலயம் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்துவ தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
கோவை திருச்சி ரோட்டில் உள்ள கிறிஸ்து நாதர் ஆலயம், ரேஸ்கோர்சில் ஆல் சோல்ஸ் ஆலயம், உப்பிலிபாளையம் இம்மானுவேல் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு சி.எஸ்.ஐ. தேவாலயங்களில் இன்று காலை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.