செய்திகள்
தஞ்சை பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை நடைபெற்றதை காணலாம்

தீபாவளி பண்டிகையையொட்டி தஞ்சையில் பூக்களின் விலை உயர்வு

Published On 2020-11-12 08:53 GMT   |   Update On 2020-11-12 08:53 GMT
தீபாவளி பண்டிகையையொட்டி தஞ்சையில் பூக்களின் விலை உயர்ந்திருந்தது.
தஞ்சாவூர்:

தஞ்சை பூக்காரத்தெருவில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு 60 கடைகள் உள்ளன. இந்த மார்க்கெட்டுக்கு திண்டுக்கல், நிலக்கோட்டை, சேலம், ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். அதாவது தினமும் 1000 டன் பூக்கள் இந்த மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும்.

இங்கிருந்து வேளாங்கண்ணி, நாகை, வேதாரண்யம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, அரியலூர், திருமானூர், கந்தர்வக்கோட்டை, அம்மாப்பேட்டை, சாலியமங்கலம், திருவாரூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தஞ்சை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலையில் அடிக்கடி ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது.

பண்டிகை காலங்களில் பூக்களின் விலை அதிகரிக்கும். தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி பூக்களின் விலை அதிகரித்துள்ளது. தஞ்சை பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ, முல்லைப்பூ, காட்டுமல்லியின் விலை உயர்ந்திருந்தது. கிலோவுக்கு ரூ.50 முதல் ரூ.500 வரை விலை உயர்ந்திருந்தது.

நேற்றுமுன்தினம் மல்லிகைப்பூ கிலோ ரூ.800-க்கும், முல்லைப்பூ ரூ.600-க்கும், காட்டுமல்லி ரூ.500-க்கும் விற்பனையானது. ஆனால் நேற்று விலை உயர்ந்து மல்லிகை, முல்லை, காட்டுமல்லி ஆகியவை ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. கனகாம்பரம் தொடர்ந்து ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் ஜாதிமல்லி, அரளி, சம்மங்கி, செவ்வந்தி, ரோஜா, மருக்கொழுந்து ஆகியவற்றின் விலையும் உயர்ந்திருந்தது. பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டாலும் பூக்களை வாங்கி செல்ல மக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
Tags:    

Similar News