செய்திகள்
பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

சிவகாசி சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை

Published On 2021-03-01 01:21 GMT   |   Update On 2021-03-01 01:21 GMT
சிவகாசி சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சிவகாசி:

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளது.

இதையடுத்து வெளியூர்களில் இருந்து சிவகாசி வரும் வாகனங்களையும், சிவகாசியில் இருந்து வெளியூர் செல்லும் வாகனங்களை கண்காணிக்கவும், விதிகளை மீறி பணப்பட்டுவாடா செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வசதியாக 3 பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.

வணிகவரித்துறை அதிகாரி கண்ணன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பறக்கும்படையில் சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல், போலீசார் கோவிந்தராஜ், ரம்யா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இதே போல் ஜெயராஜ் என்ற அதிகாரி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பறக்கும்படையில் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, போலீசார் கணேஷ்குமார், பாண்டிலட்சுமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஸ்ரீதரன் என்ற அதிகாரி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பறக்கும்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ், போலீசார் சரவணமுருகன், சாந்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் சுழற்சி முறையில் பணிகளை மேற்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள போலீசார் சோதனை சாவடி அருகே நேற்று பறக்கும்படையினர் அந்த வழியாக சென்ற கனரக வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

இதே போல் சிவகாசி-விருதுநகர் ரோட்டில் உள்ள போலீஸ் சோதனை சாவடியிலும், சிவகாசி-சாத்தூர் ரோட்டில் உள்ள போலீஸ் சோதனை சாவடிகளிலும் பறக்கும்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

சிவகாசி, திருத்தங்கல் நகராட்சி பகுதியில் நேற்று 2-வது நாளாக அரசியல் கட்சியினர் செய்திருந்த சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இதை நகராட்சி அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் தினேஷ்குமார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராமசுப்பிரமணியம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
Tags:    

Similar News