செய்திகள்
கொலை

சேலம் அருகே விசைத்தறி உரிமையாளர் கொலை

Published On 2021-07-16 08:31 GMT   |   Update On 2021-07-16 08:31 GMT
சேலம் அருகே விசைத்தறி உரிமையாளர் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நங்கவள்ளி:

சேலம் மாவட்டம் பெரியசோரகை அருகே உள்ள கரட்டூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 33). சொந்தமாக விசைத்தறி வைத்து நடத்தி வருகிறார்.

ஈரோடு மாவட்டம் பவானி, காலிங்கராயன் பாளையம் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ்(24), மணிகண்டன் (24) ஆகியோர் பெரியசோரகை பொன்னப்பன் காலனியில் வீடு எடுத்து தங்கி உள்ளனர். இவர்களுக்கும், கிருஷ்ணனுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி பொன்னப்பன் காலனியில் உள்ள வீட்டில் 3 பேரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்கிடையே ஒருவர் பணத்தை எடுத்தது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ் குக்கர் மூடியை எடுத்து கிருஷ்ணன் தலையில் ஓங்கி அடித்தார். இதில் நிலை குலைந்த கிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் தரையில் விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

பின்னர் அவரது உடலை பெட்ஷீட்டில் சுற்றி அருகில் உள்ள ராமநாதன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் வீசி விட்டு வெங்கடேசும், மணிகண்டனும் சொந்த ஊருக்கு தப்பி சென்று விட்டனர். ஆனாலும் போலீசில் சிக்கி விடுவோமோ என்று அவர்கள் பயத்தில் தூங்காமல் தவித்தனர்.

இதை தொடர்ந்து இன்று காலை நங்கவள்ளி போலீஸ் நிலையத்தில் கொலையாளிகள் 2 பேரும் சரண் அடைந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி, கிணற்றில் கிடந்த கிருஷ்ணன் உடலை போலீசார் மீட்டனர். மேலும் தொடர்ந்து 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட உள்ளனர். 

Tags:    

Similar News