செய்திகள்
கைது

மாணவனை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த சிறுவன் கைது

Published On 2021-11-30 10:06 GMT   |   Update On 2021-11-30 10:06 GMT
சிவகாசி அருகே மாணவனை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்:

சிவகாசி அருகே உள்ள என்.ஆர்.டி. நகரைச் சேர்ந்தவர் ஜேசுதாஸ். இவரது மகன் மைக்கேல் அஜய் (வயது 9) 5-ம் வகுப்பு படித்து வந்த இவன் கடந்த 26-ந் தேதி திடீரென மாயமானான்.

பல இடங்களில் தேடியும் அவனை பற்றிய தகவல் கிடைக்கவில்லை. இது குறித்து சிவகாசி டவுண் போலீசில் ஜேசுதாஸ் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் அந்தப்பகுதியில் உள்ள ஒரு குட்டையில் மைக்கேல் அஜய் உடல் மிதப்பதாக தகவல் கிடைத்தது. போலீ சார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மைக்கேல் அஜய் குட்டையில் குளித்தபோது மூழ்கி இறந்திருக்கலாம் என முதலில் கருதப்பட்டது. ஆனால் போலீசார் அந்தப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது 13 வயது சிறுவன், மைக்கேல் அஜய்யை அழைத்துச் செல்வது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அந்த சிறுவனை அழைத்து போலீசார் விசாரித்தனர். இதில் அவன் தான் மைக்கேல் அஜய்யை கொலை செய்தது தெரியவந்தது. அதன் பேரில் போலீசார் சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.

கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், மைக்கேல் அஜய்யுடன் 13 வயது சிறுவனுக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை ஜேசுதாஸ் தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த 13 வயது சிறுவன் நீச்சல் கற்றுத்தருவதாக கூறி மைக்கேல் அஜய்யை குட்டைக்கு அழைத்துச் சென்று நீரில் மூழ்கடித்துள்ளான் என தெரிய வந்துள்ளது.

Tags:    

Similar News