செய்திகள்
வேலூர் பழைய மாநகராட்சி அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

வேலூர் மாநகராட்சியில் பொதுமக்களின் தாகம் தணிக்க 20 இடங்களில் குடிநீர் தொட்டி

Published On 2021-04-09 02:40 GMT   |   Update On 2021-04-09 02:40 GMT
கடந்த பிப்ரவரி மாதத்திலேயே வெயிலின் கொடுமை இருந்தது. நாட்கள் செல்ல செல்ல வெயில் சுட்டெரித்தது. கடந்த வாரம் 110 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது
வேலூர்:

வேலூரில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதத்திலேயே வெயிலின் கொடுமை இருந்தது. நாட்கள் செல்ல செல்ல வெயில் சுட்டெரித்தது. கடந்த வாரம் 110 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. வெயிலின் கோரத்தாண்டவம் தாங்க முடியாமல் பொதுமக்கள் படாதபாடு படுகின்றனர். சாலைகளில் இளநீர், தர்பூசணி மற்றும் குளிர்பானங்கள் கடைகளுக்கு படையெடுக்கின்றனர். பொதுவாக கோடைகாலத்தில் அரசியல் கட்சியினர் தண்ணீர் மற்றும் பழப்பந்தல் அமைத்து பொதுமக்களின் தாகத்தை தீர்ப்பார்கள். தற்போது தேர்தல் நடைபெற்றதால் அவை திறக்கப்படவில்லை. எனவே வேலூர் மாநகராட்சி பகுதியில் பொதுமக்களின் தாகத்தை தீர்க்க மாநகராட்சி சார்பில் குடிநீர்தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

வேலூர் பழைய பஸ் நிலையத்திற்கு அதிக அளவில் பயணிகள் வருவார்கள் என்பதால் அங்கு குடிநீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன் உத்தரவின்பேரில், அதிக பயணிகள் வரக்கூடிய பஸ் நிறுத்தங்களில் குடிநீர் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி பஸ் நிலையங்கள், கலெக்டர் அலுவலகம் என மாநகராட்சியில் 20 இடங்களில் தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இதில் தண்ணீர் காலியான பின்னர் மாநகராட்சி ஊழியர்கள் மூலம் தண்ணீர் நிரப்பப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News