லைஃப்ஸ்டைல்
‘வயாகரா’ ஆண்மைக் குறைபாட்டை போக்குமா?... அறிந்திராத அதிர்ச்சியான விஷயங்கள்...

‘வயாகரா’ ஆண்மைக் குறைபாட்டை போக்குமா?... அறிந்திராத அதிர்ச்சியான விஷயங்கள்...

Published On 2021-02-20 08:28 GMT   |   Update On 2021-02-20 08:28 GMT
வயாகரா கண்டு பிடிக்கப்பட்டவுடன் மாத்திரை மூலமாக ஆண்மைக் குறைவை சரி செய்துவிடலாம் என்ற எண்ணம் உலகம் முழுவதும் உருவானது. ஆனால் ‘வயாகரா’ பற்றி அறிந்திராத அதிர்ச்சியான விஷயங்கள் உள்ளன. அவை என்ன தெரியுமா?
உலக அளவில் கண்டுபிடிக்கப்பட்ட மாத்திரைகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, வயாகரா. ஆண்களின் பாலியல் செயல்பாட்டை மேம்படுத்தும் இந்த மாத்திரைகளை பெரும்பாலான நாடுகளில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ‘ஆண்கள் சமூகத்திற்கு கிடைத்த அற்புதம்’ என்றும் இதனை புகழ்கிறார்கள். ஆனால் இது கண்டு பிடிக்கப் பட்ட விதம் ரொம்பவும் வினோதமானது.

பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்று, இதய நோயுள்ளவர்களுக்கு ரத்தத்தை அதிகமாக இதயத் தினுள் செலுத்தும் புதிய மருந்தைக் கண்டுபிடிப்பதில் ஈடுபட்டிருந்தது. அவர்கள் கண்டுபிடித்த மருந்தின் பெயர் ‘சில்டெனபில் சிட்ரேட்’. அதனை மூவாயிரம் பேர் களுக்குக் கொடுத்து ஆய்வு செய்ததில், அந்த மருந்து தோல்விக்குரிய ஒரு கண்டுபிடிப்பு என தெரியவந்தது. அதாவது இதயத்திற்குள் அது அதிக அளவில் ரத்தத்தை செலுத்தவில்லை.

அதே நேரத்தில் அந்த மருந்தை உட்கொண்டவர்கள் தங்களுடைய உடலுறவில் இன்பம் அதிகரித்ததாகக் கூறினர். உடனே அந்த நிறுவனம் அதனை ஆண்மைக் குறைவு உள்ளவர்களுக்கான மருந்தாக ஆராய்ச்சி செய்து, மேம்படுத்தி வயாகரா என்ற பெயரில் வெளியிட்டது. உலகம் முழுவதும் அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

ஆண்மைக் குறைபாட்டை போக்க பலவகையான மருந்துகள் உள்ளன. எதனால் ஆண்மைக் குறைவு ஏற்பட்டிருக்கிறது என்பதைப் பொறுத்து அதற்காக பரிந்துரை செய்யப்படும் மருந்தும் மாறுபடும். ஆனால், வயாகரா கண்டு பிடிக்கப்பட்டவுடன் மாத்திரை மூலமாக ஆண்மைக் குறைவை சரி செய்துவிடலாம் என்ற எண்ணம் உலகம் முழுவதும் உருவானது. அதுவே, பரபரப்புக்கு ஒரு காரணம். வயாகரா சாப்பிடுவதன் மூலம் ரத்த ஓட்டம் குறிப்பிட்ட பகுதிக்கு பாய்ந்து விறைப்புத்தன்மையை ஏற்படுத்துகிறது.

இதனால் பல்வேறு விதமான பின்விளைவுகளும் தோன்றின. தலைசுற்றல், வாந்தி, மயக்கம், கண்பார்வை மங்குதல் போன்றவை ஏற்பட்டன. இதய நோயுள்ளவர்கள் உயிர் இழக்கும் அபாயமும் ஏற்பட்டது. அதனால் வயாகராவை டாக்டரின் பரிந்துரையின்றி உட்கொள்ளக்கூடாது. நோயில்லாத அமெரிக்க ஆண்களில் நிறைய பேர் இதனை கண்டபடி பயன்படுத்தியதால், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்ததாகவும் அப்போது தகவல்கள் வெளியாகின. எய்ட்ஸ் நோய்-பால்வினை நோய்கள் பெருகியதாகவும் கூறப்பட்டது. வயாகரா மாத்திரையை நோயாளிகள் யாரும் பயன்படுத்திவிடக்கூடாது. தற்போது ஆண்மைக் குறைவுக்கு அதைவிட சக்திமிக்க, பின்விளைவுகளற்ற மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.
Tags:    

Similar News