செய்திகள்
வனப்பகுதியில் சாலையோரம் நின்ற காட்டு யானை- வாகன ஓட்டிகள் அச்சம்
தேன்கனிக்கோட்டை அருகே வனப்பகுதியில் சாலையோரத்தில் காட்டு யானை நின்றதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள மரக்கட்டா காப்புக்காட்டில் ஏராளமான காட்டு யானைகள் முகாமிட்டு சுற்றித்திரிகின்றன. இந்த காட்டு யானைகள் கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒரு காட்டு யானை தினமும் மரக்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறி வனப்பகுதியை ஒட்டியுள்ள சாலையோரத்தில் சுற்றித்திரிகிறது. இதனால் தினமும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அந்த சாலையில் அச்சத்துடன் பயணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலையும் அந்த ஒற்றை காட்டு யானை தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையில் மரக்கட்டா வனப்பகுதியில் சாலையோரம் நின்று இருந்தது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சாலையில் மெதுவாக ஒருவித அச்சத்துடன் சென்றனர். அப்போது இந்த ஒற்றை காட்டுயானை மூங்கில் மர கிளைகளை ஒடித்து தின்றவாறு நீண்ட நேரம் ஒரே இடத்தில் நின்று இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று யானையை பட்டாசு வெடித்து வனப்பகுதிக்கு விரட்டினர். தினமும் சாலையோரங்களில் நின்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வரும் இந்த காட்டுயானையை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.