ஆன்மிகம்
நாகையில் சிவபெருமானுக்கு அதிபத்த நாயனார் தங்க மீன் வழங்கும் விழா

நாகையில் சிவபெருமானுக்கு அதிபத்த நாயனார் தங்க மீன் வழங்கும் விழா

Published On 2021-09-06 04:53 GMT   |   Update On 2021-09-06 04:53 GMT
இந்த ஆண்டு அதிபத்தநாயனார் சிவபெருமானுக்கு தங்க மீன் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.இந்த காட்சியை கடற்கரையில் நின்று திரளான பக்தர்கள் பார்த்தனர்.
நாகையில் நீலாயதாட்சியம்மன் காயாரோகண சாமி கோவில் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்புகளை பெற்ற இந்த கோவிலில் 63 நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனார் தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அதிபத்த நாயனார் நுழைபாடி எனும் நம்பியார் நகரில் மீனவ சமுதாயத்தில் பிறந்த சிவ பக்தரான அவர் மீன்பிடி தொழில் செய்து வந்தார்.

அப்போது தான் பிடிக்கும் முதல் மீனை சிவனுக்கு அர்ப்பணித்து கடலில் விடுவதை வழக்கமாக கொண்டு இருந்தார். சில நேரங்களில் கடலில் கிடைப்பது ஒரு மீனாக இருந்தாலும் அதையும் சிவபெருமானுக்கே கொடுத்துவிட்டு வீட்டிற்கு வெறுங்கையுடன் செல்வார். இவர் பக்தியை சோதிக்க வேண்டி சிவபெருமான், அதிபத்தருக்கு கடலில் தங்க மீன் ஒன்றை கிடைக்குமாறு செய்தார்.

அதிபத்தர் தனக்கு கிடைத்த தங்க மீனையும் சிவபெருமானுக்கே கொடுத்துவிட்டு சென்றார். அவரின் பக்தியை உணர்ந்த சிவபெருமான், பார்வதி தேவியுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அதிபத்தருக்கு காட்சி அளித்தார்.

இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் நாகை புதிய கடற்கரையில் ஆவணி மாதம் ஆயில்ய நட்சத்திர நாளில் கடலில் தங்க மீன் விடும் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக கடலில் தங்கமீன் விடும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு, நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் எளிமையாக விழா நடந்தது.

இந்த ஆண்டு அதிபத்தநாயனார் சிவபெருமானுக்கு தங்க மீன் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக நீலாயதாட்சியம்மன் கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் வெள்ளி மீன்களை நம்பியார் நகருக்கு எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து நம்பியார் நகர் முத்துமாரியம்மன் கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பின்னர் வெள்ளி மற்றும் தங்க மீன்னை நம்பியார் நகர் கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டது.

பின்னர் அதிபத்த நாயனாரின் உற்சவர் சிலையை மீனவர்கள் பைபர் படகில் ஏற்றி கடலுக்கு எடுத்துச் சென்றனர். இதையடுத்து வெள்ளி மற்றும் தங்க மீனை பிடிக்கும் காட்சியும், அதை அதிபத்த நாயனார் சிவபெருமானை வேண்டி கடலில் விடும் காட்சியும் நடைபெற்றன. அப்போது சிவபெருமான் பார்வதியுடன் அதிபத்த நாயனாருக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த காட்சியை கடற்கரையில் நின்று திரளான பக்தர்கள் பார்த்தனர்.
Tags:    

Similar News