செய்திகள்
மதுரை எல்லீஸ் நகர் மேம்பாலத்தில் ஏறி நின்று தற்கொலைக்கு முயன்ற லெனின்குமார்.

மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே ரெயில்வே மேம்பாலத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்

Published On 2021-10-14 12:55 GMT   |   Update On 2021-10-14 12:55 GMT
மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே எல்லீஸ்நகர் ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து குதிக்கப்போவதாக வாலிபரின் மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை:

மதுரை பெரியார்பஸ் நிலையம் அருகே உள்ள எல்லீஸ் நகர் ரெயில்வே மேம்பாலத்தில் மேலே ஏறி நின்று வாலிபர் ஒருவர் கீழே குதிக்க போவதாக நேற்று மாலை சத்தம் போட்டுள்ளார். அப்போது அந்த வழியாக வாகனத்தில் சென்றவர்கள் வாகனத்தை நிறுத்தி அவரை கீழே இறங்குமாறு கூறியுள்ளனர்.

ஆனால் அந்த வாலிபர் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி கொண்டே இருந்தார். இதற்கிடையே ஒருவர் பாலத்தின் மேலே ஏறி அவரிடம் கீழே இறங்கி வா பேசி கொள்ளலாம் என்று கூறியுள்ளார். ஆனாலும் அந்த நபர் பாலத்தில் இருந்து கீழே இறங்க மறுத்து விட்டார்.

பின்னர் அங்கிருந்தவர்கள் திடீர்நகர் தீயணைப்புத்து றையினருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் தகவல் அறிந்து போலீசாரும் அங்கு விரைந்து வந்தனர். மேலும் தீயணைப்புத் துறையினர் பாலத்தின் மீது ஏறி அவரிடம் சாதுர்யமாக பேசி வாலிபரை கீழே இறக்கி அழைத்து வந்தனர்.

பின்னர் அவரை தீயணைப்புத்துறையினர் மற்றும் எஸ்.எஸ். காலனி போலீசார் விசாரித்த போது நியூ எல்லீஸ் நகர், 70 அடி ரோடு பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் மகன் லெனின்குமார் (வயது 20) என்பது தெரியவந்தது. மேலும் அவருக்கும் செல்லூர் வைத்தியநாதபுரத்தை சேர்ந்த சுருதி என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அவருக்கு குழந்தை பிறந்துள்ளது.

லெனின்குமார் குழந்தை பார்க்க மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவரது மாமியார் அவரை வீட்டிற்குள் அனுமதிக்காமல் விரட்டியுள்ளார். அதனால் மனவருத்தம் அடைந்தஅவர் பாலத்தில் மேலே ஏறி தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

பின்னர் போலீசார் அவரை எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். குழந்தையை பார்க்க முடியாத ஏக்கத்தில் வாலிபர் பாலத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் அந்த பாலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News