மகாராஷ்டிராவில் பா.ஜனதா ஆட்சி அமைத்தது ஜனநாயகத்துக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகம்- கனிமொழி
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. சார்பில் நேற்று முன்தினம் பல்மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. தொடர்ந்து நேற்று இலவச பல்நோக்கு மருத்துவ முகாம் நடந்துள்ளது. இதுவரை சுமார் 1,000 பேர் வரை இந்த மருத்துவ முகாமுக்கு வந்து உள்ளனர். கண் மருத்துவம், பல், இதயம், புற்றுநோய் பரிசோதனை, மகளிர் மருத்துவம் என்று அனைத்து பிரிவுகளிலும் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி தொகுதியில் உள்ள விமான நிலைய விரிவாக்கம் மற்றும் இரவு நேரத்தில் விமானம் தரையிறங்குவதற்கான வசதியும் தேவை. இதனை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி அமைத்து இருப்பது தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமின்றி ஜனநாயகத்துக்கு இழைக்கப்பட்டு உள்ள மிகப் பெரிய துரோகம். யார் வெற்றி பெற்றாலும், நாங்கள்தான் அரசு அமைப்போம் என்ற மனநிலையில் மத்திய பா.ஜனதா அரசு செயல்பட்டு கொண்டு இருக்கிறது.
இந்திய வங்கிகளை உலக அளவில் உயர்த்துவோம் என்கிறார்கள். முதலில் இந்திய பொருளாதாரத்தையும், வேலைவாய்ப்பையும், இந்திய தரத்துக்காவது உயர்த்த வேண்டும். தொடர்ந்து பொருளாதாரம் சரிவடையாமல் பாதுகாத்தார்கள் என்றாலே போதும். அதன்பிறகு உலக தரத்தை பற்றி பேசலாம்.
முதுநிலை மருத்துவ படிப்புகளில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு இல்லை என்று கூறி உள்ள மத்திய அரசு, பொதுப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு அறிவித்து இருப்பதற்கு எதிராக பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.