ஆன்மிகம்
விநாயகர்

கடன் தொல்லை நீக்கும் விநாயகப் பெருமான் விரதம்

Published On 2020-09-21 05:28 GMT   |   Update On 2020-09-21 05:28 GMT
சதுர்த்தி தினத்தன்று காலையில் எழுந்து உடலையும், உள்ளத்தையும் சுத்தமாக்கி, விரதத்தை ஆரம்பித்து அன்றைய தினம் சந்திரன் உதயமாகும் வரை எந்த உணவையும் உண்ணாது, விநாயகப் பெருமான் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
ஒரு மனிதனுக்கு சங்கடம் என்பது ஒன்று மனதால் வருகிறது அல்லது பணத்தால் வருகிறது. இந்த சங்கடங்கள் அகன்று சந்தோஷம் பெருக வேண்டுமானால், சங்கடஹர சதுர்த்தி விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். சதுர்த்தி என்றாலே நம் நினைவிற்கு வருபவர் கணபதி. ஒவ்வொருவரும் தங்களது ஆவல்கள் பூர்த்தியாக இந்த சதுர்த்தி விரதத்தை மேற்கொள்ளலாம். பொதுவாக உண்ணா நோன்பு இருக்கின்ற பொழுது நமது உடலும் வலிமை பெறுகின்றது. உள்ளமும் இறை உணர்வால் பலம் பெறுகின்றது. சதுர்த்தி திதி தேய்பிறையில் வந்தால் அது சங்கடஹர சதுர்த்தி என்று அழைக்கப்படுகின்றது.

சதுர்த்தி தினத்தன்று காலையில் எழுந்து உடலையும், உள்ளத்தையும் சுத்தமாக்கி, அன்றைய தினம் சந்திரன் உதயமாகும் வரை எந்த உணவையும் உண்ணாது, விநாயகப் பெருமான் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

மஞ்சளில் விநாயகர், பிள்ளையார் படம் அல்லது விக்கிரகம் (மாலை மற்றும் பூ அணிவிப்பதற்கு) அர்ச்சனை செய்வதற்கு மஞ்சள் கலந்த அட்சதை பூக்கள், வாசனை மிக்க பூக்களால் ஆன மாலைகள், பஞ்சபாத்திரம். தீர்த்த பாத்திரத்தில் சுத்தமான நீர், மணி, தூபக்கால், தீபத்தட்டு, கற்பூரம், குத்துவிளக்கு, திரி, எண்ணெய், ஊதுபத்தி, சாம்பிராணி, விபூதி, குங்குமம். அமர்ந்து பூஜை செய்வதற்கு பலகை, இனிப்புச் சுவையுடைய நைவேத்தியப் பொருட்கள். (மோதகம், அப்பம், கொழுக்கட்டை ஏதேனும் ஒன்று. அவல், பொரி கடலையும் வைக்கலாம்)

இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டு பூஜையறையில் ஐந்துமுக விளக்கேற்றி, உள்ளங்கையை தீர்த்தத்தால் சுத்தம் செய்து பிறகு தீர்த்தத்தைப் பருகி ‘ஓம் அச்யுதாய நம’ என்றும், ‘அனந்தாய நம’ என்றும் மூன்றுமுறை சொல்ல வேண்டும்.

பிறகு இரண்டு உள்ளங்கைகளிலும் மஞ்சள் அரிசியான அட்சதையை வைத்துக் கொண்டு, ‘சுக்லாம்பரதம் விஷ்ணும் சசிவர்னம் சதுர்புஸம், ப்ரஸன்ன வதனம் த்யோயேத் ஸர்வ வின்னோப சாந்தயே’ என்று கூறிய படி தலையில் ஐந்துமுறை குட்டிக் கொள்ள வேண்டும். பிறகு தியானம் செய்ய வேண்டும். தங்களுக்குத் தெரிந்த விநாயகர் அகவல், விநாயகர் பாடல், மந்திரங்களைச் சொல்லி மனமுருகி விநாயகரை வழிபட வேண்டும்.

பூஜை செய்யும் பொழுது நைவேத்தியமாகப் படைக்கும் கொழுக்கட்டையை, குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு கொடுத்துவிட்டு, விரதமிருந்தவர்கள் அந்தக் கொழுக்கட்டையும் பாலும் குடிக்கலாம். இயலாதவர்கள் உடல் நலம் கருதி இரவு உணவை பலகாரமாக உட்கொள்ளலாம். பகலில் பால் அல்லது பழச்சாறு குடித்துக் கொள்ளலாம்.
Tags:    

Similar News