செய்திகள்
கைது

திருமங்கலம் அருகே கார் மோதி காவலாளி பலி - டிரைவர் கைது

Published On 2019-10-08 06:41 GMT   |   Update On 2019-10-08 06:41 GMT
திருமங்கலம் அருகே கார் மோதிய விபத்தில் காவலாளி பலியானார். டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
திருமங்கலம்:

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியைச் சேர்ந்தவர் மகாராஜன் (வயது 62). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார்.

நேற்று மகாராஜன் அதே பகுதியில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலக ரோட்டில் நடந்து சென்றார். அப்போது ரோட்டை கடக்க முயன்ற போது ஆலம்பட்டியில் இருந்து திருமங்கலம் நோக்கி சென்ற கார், எதிர்பாராத விதமாக மகாராஜன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த திருமங்கலம் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து தொடர்பாக ஆலம்பட்டியைச் சேர்ந்த கார் டிரைவர் கருப்பசாமி என்பவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News