உள்ளூர் செய்திகள்
தங்க நாணயத்துடன் நிதி உதவி திட்டத்தை முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

திருமண உதவி திட்டத்தின்கீழ் 94,700 பேருக்கு தங்க நாணயத்துடன் நிதி உதவி- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Published On 2022-01-13 09:36 GMT   |   Update On 2022-01-13 12:44 GMT
சென்னை மாவட்டத்தைச் சார்ந்த 2,900 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக 5 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவித் தொகையுடன் 8 கிராம் தங்க நாணயத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் செயல்படுத்தப்படும் திருமண உதவித் திட்டம் என்பது பெண்களின் உயர்கல்வியை ஊக்கப்படுத்தும் வகையிலும், பெண்களின் திருமணத்திற்காக பெண் குழந்தைகளின் பெற்றோருக்கு திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்கு தங்க நாணயம் அளிக்கும் வகையிலும், ஏழைப் பெற்றோரின் மகள், ஆதரவற்ற பெண்கள், மறுமணம் செய்து கொள்ளும் விதவையர், ஏழை விதவையரின் மகள், கலப்புத் திருமணம் செய்துகொள்ளும் தம்பதியர் ஆகியோர் பயன்பெறும் வகையிலும் செயல்படுத்தப்படும் தலையாயத் திட்டமாகும்.

இத்திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு 8 கிராம் தங்க நாணயத்துடன் நிதியுதவியும் வழங்கப்பட்டு வருகிறது.

திருமண நிதியுதவி திட்டங்களின் கீழ் 2021-2022-ம் நிதியாண்டிற்கு 762 கோடியே 23 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பட்டம்-பட்டயப் படிப்பு படித்த 53,599 பயனாளிகள், பட்டதாரியல்லாத 41,101 பயனாளிகள், என மொத்தம் 94,700 பயனாளிகள் பயனடைய உள்ளனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், சென்னை மாவட்டத்தைச் சார்ந்த 2,900 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக 5 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவித் தொகையுடன் 8 கிராம் தங்க நாணயத்தை வழங்கினார்.

இந்தநிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, கீதாஜீவன், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News