செய்திகள்
கோப்புபடம்

செங்கம் அருகே ஓடையில் மூழ்கி உயிரிழந்த சிறுவன் உடலுடன் கிராம மக்கள் மறியல்

Published On 2021-10-11 10:51 GMT   |   Update On 2021-10-11 10:51 GMT
செங்கம் அருகே ஓடையில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் உடலுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுப்பாளையம்:

செங்கம் அடுத்த தீத்தாண்டப்பட்டு ராஜீவ் காந்தி நகரில் வசிப்பவர் தாமோதரன். இவரது மகன் சற்குணன்(4). இவர் அதே பகுதியில் உள்ள ஓடையை நேற்று முன் தினம் கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, ஓடையில் நீர்வரத்து அதிகரித்ததால் தண்ணீரில் மூழ்கி சற்குணன் உயிரிழந்துள்ளான்.

இந்நிலையில், ஓடையை கடக்க பாலம் கட்டிக் கொடுக்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றி இருந்தால், 4 வயது சிறுவனின் உயிர் பறிபோயிருக்காது எனக் கூறி, சிறுவனின் உடலுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், அவ்வழியாக சென்ற அரசு பஸ்சை சிறைபிடித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த டிஎஸ்பி சின்னராஜ் தலைமையிலான போலீசார் மற்றும் ஊரக வளர்ச்சி மாவட்ட இயக்குனர் லட்சுமி நரசிம்மன் சம்பவ இடத்துக்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கிராம மக்களின் கோரிக்கையை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என உறுதி அளித்துள்ளனர்.

இதையடுத்து சாலை மறியல் முடிவுக்கு வந்தது. சிறுவனின் உடலும், வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

Tags:    

Similar News