ஆன்மிகம்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கஜபூஜை நடைபெற்றதையும், பக்தர்கள் தரிசனம் செய்ததையும் படத்தில் காணலாம்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கஜபூஜை- தேரோட்டம் நாளை நடக்கிறது

Published On 2019-07-06 06:08 GMT   |   Update On 2019-07-06 06:08 GMT
ஆனித்திருமஞ்சன விழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் கஜபூஜை நடைபெற்றது. தேரோட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலையில் நடக்கிறது.
சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. பஞ்ச பூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திருமஞ்சனமும் விமரிசையாக நடைபெறும்.

அந்த வகையில் இந்தாண்டுக்கான ஆனித்திருமஞ்சன விழா கடந்த 27-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து தினமும் சாமிக்கு சிறப்பு பூஜைகளும், இரவில் தங்கம், வெள்ளி, பூத, ரிஷப, யானை உள்ளிட்ட வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நிகழ்ச்சியும், கடந்த 3-ந் தேதி தெருவடைச்சான் உற்சவமும் நடைபெற்றது.

நேற்று முன்தினம் கஜபூஜை நடைபெற்றது. இதையொட்டி கும்பகோணம் கோவிலில் இருந்து சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு யானை வரவழைக்கப்பட்டது. மாலையில் யாகசாலையில் கஜ பூஜை நடந்தது. இதில் யானைக்கு பட்டாடை அணிவித்து, சந்தனம், மலர் அரங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. பின்னர் யானை, நடராஜருக்கு மலர் தூவி வணங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது.

8-ம் நாள் விழாவான இன்று(சனிக்கிழமை) காலை தங்க ரதத்தில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும, இரவில் பிஷாடனர், வெட்டுங் குதிரை வாகனத்தில் வீதி உலாவும் நடைபெறுகிறது.

விழாவின் 9-வது நாளான நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் தேரோட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன்முகப்பு மண்டபத்தில் ஏக கால லட்சார்ச்சனை நடைபெற உள்ளது.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக ஆனித்திருமஞ்சனம் நாளை மறுநாள்(திங்கட்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகா அபிஷேகமும், அதைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடைபெற உள்ளது.

பின்னர் மதியம் 2 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன விழா நடைபெறுகிறது. அப்போது ஆயிரங்கால் மண்டபத்தின் முன்பு நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் மூன்று முறை முன்னும், பின்னும் நடனம் ஆடி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கின்றனர்.

இதையடுத்து வருகிற 9-ந் தேதி(செவ்வாய்கிழமை) இரவு முத்துப்பல்லக்கில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும், 10-ந்தேதி(புதன்கிழமை) தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News