செய்திகள்
வாலிபர் பலி

வத்தலக்குண்டு அருகே பூஜையின்போது தீயில் கருகி வாலிபர் பலி

Published On 2019-08-02 13:01 GMT   |   Update On 2019-08-02 13:01 GMT
வத்தலக்குண்டு அருகே பூஜையின்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

வத்தலக்குண்டு:

வத்தலக்குண்டு அருகில் உள்ள வெங்கிட்டாபட்டியை சேர்ந்தவர் விஜய்ஆனந்த் (வயது37). இவர் வத்தலக்குண்டுவில் ஜூஸ் கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி சுகன்யா என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

நேற்று முன்தினம் ஆடிஅமாவாசை அன்று வீட்டில் பூஜை செய்வதற்காக விஜய்ஆனந்த் ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். சாம்பிராணி புகை போட அடுப்பு கரியில் மண்எண்ணை ஊற்றி பற்ற வைத்தார். அது எரியாததால் மேலும் மண்எண்ணை ஊற்றி ஊதியபோது அது குபீரென அவரது உடல் மீது பரவி தீ பற்றியது.

இதனால் விஜய்ஆனந்த் உடல் முழுவதும் தீ பிடிக்க தொடங்கியது. அவரது சத்தம் கேட்டு மனைவி சுகன்யாவும் ஓடிவந்து காப்பாற்ற முயன்றார். இதனால் 2 பேருக்கும் உடலில் தீ பிடித்து காயம் ஏற்பட்டது.

படுகாயம் அடைந்த 2 பேரும் வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி விஜய்ஆனந்த் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். சுகன்யா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வத்தலக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News