செய்திகள்
கருணை தெய்வம் காஞ்சி மகான்

கருணை தெய்வம் காஞ்சி மகான் - ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்

Published On 2021-11-10 12:58 GMT   |   Update On 2021-11-10 12:58 GMT
கருணை தெய்வம் காஞ்சி மகான் குறித்து ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன் ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
காஞ்சி பெரியவாளுடைய அத்யந்த பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகளை எப்போதும் மகானிடம் நேரில் சொல்ல மாட்டார்கள்.
நேரடியாகச் சொல்லாமல் மகானை மனதுக்குள் பிரார்த்தித்துக் கொள்வார்கள். ஆத் மார்த்தமான அந்தப் பிரார்த்தனைக்கு நிச்சயம் பலன் உண்டு. என்ன வேண் டினார்களோ, அவை நிறைவேறி விடும்.
மனசுக்குள் பிரார்த்தித்துக் கொள்வதும் ஒரு வகை தியானமே!
அதுபோல் அங்கம்மாளின் தாயார், பெரியவா திருச்சந்நிதியில் மனசுக்குள் வேண்டிக் கொண்டதற்கு நல்ல பலனும் இருந்தது.
ஆம்! அங்கம்மாளுக்கு வேலை கிடைத்து விட்டது.

சென்னை சைதாப்பேட்டை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் (எம்ப்ளாய்மெண்ட் எக்ஸ்சேஞ்ஜ்) உத்தியோகம் கிடைத்தது. இதற்காக இத்தனை நாட்களாக மெனக்கெட்ட அவரது அம்மாவுக்கு சந்தோஷமான சந்தோஷம்.
அங்கம்மாளின் கணவர் ராமபிரசாத்துக்கும் ஒரு வகையில் சந்தோஷம்தான். மாதா மாதம் குடும்பத்தின் வரவு கூடுகிறதே! அரசு உத்தியோகம் என்றால், சும்மாவா? கசக்கவா செய்யும்!
வேலை அமைந்தபோது அங்கம்மாளுக்கு இரண்டு மாத கைக்குழந்தை இருந்தது. ஆண் குழந்தை.
 அங்கம்மாளின் தாயார் உடன் இருந்து குழந்தையை நன்றாகவே கவனித்துக் கொண்டார். காரணம், இருவரும் வேலைக்குச் செல்பவர்கள் ஆயிற்றே!
ஒரு சில மாதங்கள் ஓடின. ‘கைக்குழந்தையை ஊருக்கே கூட்டிக் கொண்டு போய்க் கவனித்துக் கொள்கிறேன்’ என்று சொல்லி விட்டுச் சொந்த ஊரான திருநெல்வேலி கடையநல்லூருக்குப் புறப்பட்டு விட்டார் அங்கம்மாளின் தாயார்.
தினமும் காலையில் எழுந்து அரக்கப் பரக்கச் சமையலை முடிப்பார் அங்கம்மாள். பிறகு, கணவர் ராமபிரசாத்துக்கும் தனக்கும் டப்பாவில் அடைத்துக் கொண்டு இருவரும் ஆபீஸ் புறப்பட்டு விடுவார்கள்.

எண்ணூரில் இருந்து தினமும் சைதாப்பேட்டைக்கு வந்து செல்வது சிரமமாக இருந்தது அங்கம்மாளுக்கு. ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் அலைந்து திரிவார்கள். ஆனால், பெண்களுக்கு அது கஷ்டமாயிற்றே! எனவே, ஒரு கட்டத்தில் தன் வீட்டை சைதாப்பேட்டைக்கே  மாற்றி விட்டார் அங்கம்மாள்.
ராமபிரசாத்துக்கு அப்போது வயது 45. திடீரென அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. பசி என்பது இல்லாமல் போயிற்று. மதிய நேரத்தில் திடீர் திடீரென ஜுரம் வரும். ஆரம்பத்தில் கை வைத்தியங்கள் செய்து பார்த்தார் அங்கம்மாள். பலன் தரவில்லை. நோயின் தாக்கம் குறையவில்லை.

எத்தனையோ மருத்துவமனைகள் ஏறி இறங்கியாயிற்று. சிறப்பு மருத்துவர்களையும் பார்த்தாயிற்று. எந்த ஒரு மருத்துவமனையாலும் ‘இன்னதுதான் பிரச்சினை’ என்று தீர்மான மாகக் கணித்துச் சொல்ல முடியவில்லை. என்றாலும் மாத்திரை, மருந்துகளை எழுதிக் கொடுத்தார்கள். ஆனால், ராமபிரசாத் உடல் நலன் தேறவில்லை. எந்த ஒரு சிகிச்சையும் பலன் தரவில்லை.
இந்த அவஸ்தையினால் ராமபிரசாத்தால் வேலைக்கும் தொடர்ந்து செல்ல முடிய வில்லை. வேலைக்குப் போகாமலேயே ஒண்ணேகால் வருடம் ஓடியது. அந்த நேரத்தில் குடும்பம் நடத்துவதற்கு அங்கம்மாளின் சம்பளம்தான் பயன்பட்டது.
இப்படி எல்லாம் குடும்பத்தில் ஆகும் என்று தெரிந்தோ என்னவோ... மகா பெரியவா அனுக்ரகத்தால் அங்கம்மாளுக்கு ஒரு வேலையும் கிடைத்திருந்தது.

ராமபிரசாத்தின் நண்பர் ஒருவர் இருந்தார். அவருக்கும் அசோக் லேலண்டில்தான் உத்தியோகம். உடல் நலன் காரணமாக ராமபிரசாத் அலுவலகம் செல்ல முடியாத சந்தர்ப்பங்களில் ஏதேனும் வேலை இருந்தால், இந்த நண்பரிடம்தான் சொல்லி அனுப்புவார். நண்பரும் மிகப் பொறுப்பாக விசாரித்து விட்டு வருவார். அலுவலகத்தில் இருந்து நேராக ராமபிரசாத் வீட்டுக்கு வந்து ரிப்போர்ட் பண்ணுவார். அந்த அளவுக்கு நெருங்கிய நட்பு இந்த இருவரின் குடும்பத்துக்கும் இருந்து வந்தது.
 அங்கம்மாள் குடும்பமோ, ஆன்மிகக் குடும்பம். அதுவும் மகா பெரியவா மீது இந்தக் குடும்பத்தினருக்கு பக்தி அதிகம். ஆனால், ராமபிரசாத்தின் இந்த நண்பரோ நாத்திகர். கோயில், குளம் பக்கம் தப்பித் தவறிக்கூட எட்டிப் பார்க்க மாட்டார். அவர் மட்டுமல்ல... அவரது மனைவிக்கும் இதே நாத்திகக் கொள்கைதான்.

இந்த இரு குடும்பத்தினருக்கும் கொள்கைகள் வேறு வேறாக இருந்தாலும், இரு குடும்பத்துக்கும் இடையே ஆழமான நட்பு நீடித்தது.
நல்லவர்களை நாம் சார்ந்திருந்தால் நமக்கும் நல்லதே நடக்கும்.
அதுபோல் ஆத்திகக் குடும்பத்தைச் சேர்ந்த அங்கம்மாளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த இந்த நாத்திகக் குடும்பத்துக்கும் மகா பெரியவா அருளால் ஒரு நல்லது நடந்தது. நாத்திக நண்பரின் மனைவிக்கு ஒரு இன்டர்வியூ வந்தது. எங்கிருந்து தெரியுமா?
காஞ்சிபுரத்தில் இருக்கிற அரசுக் கல்வித் துறை அலுவலகத்தில் இருந்து. அங்கே, ஆசிரியைப் பணிக்கான இன்டர்வியூ.
நாத்திக நண்பரின் மனைவிக்குத் தனியே காஞ்சிபுரம் சென்று இன்டர்வியூ அட்டென்ட் செய்வதில் சற்றே பயம். அந்த அளவுக்கு வெளியிடங்களுக்குச் சென்று பழக்கம் இல்லை. இந்த விவரம் நாத்திக நண்பர் மூலம் ராமபிரசாத்துக்குத் தெரிய வந்தது.
தான் அலுவலகம் செல்லவில்லை என்றாலும், அலுவலகம் தொடர்பான வேலைகளை சிரத்தையுடன் கவனித்து வரும் நண்பருக்கு உதவ எண்ணினார். விஷயத்தைத் தன் மனைவி அங்கம்மாளிடம் சொன்னார். ‘அவர் மனைவியுடன் நீயும் காஞ்சிக்குச் சென்று வா’ என்று கேட்டுக் கொண்டார்.

‘தங்களுக்கு மிகவும் உதவுகிறவர்கள் ஆயிற்றே... இவர்களுக்கு நாம் உதவாமல் வேறு யார் உதவுவார்கள்?’ என்று அங்கம்மாளும் சம்மதித்தார். இன்டர்வியூ தினத்தில் அந்தப் பெண்மணியை பேருந்தில் காஞ்சிபுரம் கூட்டிப் போனார்.
காலையில் பதினோரு மணி வாக்கில் இன்டர்வியூவுக்கான நேரம் குறித்திருந்தார்கள். உரிய நேரத்தில் அங்கம்மாளும், நாத்திக நண்பரின் மனைவியும் காஞ்சிபுரம் கல்வித் துறை அலுவலகத்துக்குச் சென்று விட்டார்கள். ஆனாலும், குறிப்பிட்ட நேரத்தில் அழைப்பு வரவில்லை. பிறகுதான் சொன்னார்கள் - ‘உங்களுக்கான நேர்முகத் தேர்வு மாலை நாலரை மணிக்கு மாற்றப்பட்டிருக்கிறது’ என்று. இருவரும் திடுக்கிட்டுப் போனார்கள்.

‘சென்னையாக இருந்தால், வீட்டுக்குப் போய் விட்டுப் பிறகு இன்டர்வியூக்கு வரலாம். ஆனால், தற்போது இருப்பது காஞ்சிபுரம் ஆயிற்றே... தெரிந்தவர்கள் யாரும் இங்கு இல்லையே’ என்று இருவரும் குழம்பினார்கள்.
‘மாலை வரை எப்படி இந்த அரசாங்க அலுவலகத்திலேயே அமர்ந்திருப்பது? என்ன செய்யலாம்?’ என்று யோசித்தார் அங்கம்மாள். அப்போதுதான் அவருக்கு காஞ்சி மகா பெரியவா நினைவுக்கு வந்தார். ‘ஆகா... பெரியவா ஸ்ரீமடத்தில்தானே இப்போது இருப்பார். இந்த இடைப்பட்ட நேரத்தில் அவரைப் போய் தரிசிக்கலாமே’ என்று உற்சாகமானார்.

நாத்திக நண்பரின் மனைவியைப் பார்த்துச் சொன்னார்: ‘‘சாயங்காலம் வரைக்கும் நாம இங்கே உக்கார முடியாது. நாம எங்கேயாவது வெளியிலதான் போயாகணும். இங்கே பக்கத்துல காஞ்சி மடம் இருக்கு. அங்கே எங்கள் குருவான ஆச்சார்யரை தரிசிக்கப் போகலாம்னு எனக்குத் தோணுது. நீயும் வரியா?’’
நாத்திக எண்ணம் கொண்டவரைக் கட்டாயப்படுத்திக் கூப்பிட முடியாது என்பதால், நாசூக்காகக் கூப்பிட்டுப் பார்த்தார்.
அந்தப் பெண்மணி சொன்னார்: ‘‘நீங்க உள்ளே போயிட்டு வாங்க... திரும்பி வர்ற வரைக்கும் நான் வெளியிலயே இருக்கேன்.’’
‘‘சரி... வாங்க புறப்படலாம்’’ என்று இருவரும் காஞ்சி ஸ்ரீமடத்தை நோக்கி நடந்தார்கள். அடுத்த சில நிமிடங்களில் இருவரும் ஸ்ரீமடத்தின் வாசலில் இருந்தார்கள்.  ஸ்ரீமடத்தின் வாசலில் அப்போது திண்ணைகள் போன்ற அமைப்பு இருந்தது. நாத்திகரின் மனைவி ஒரு திண்ணையில் உட்கார்ந்து கொண்டார்.


ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்

மனம் நிறைய பூரிப்புடன், கைகளைக் குவித்துக் கொண்டு ஸ்ரீமடத்தினுள் நுழைந்தார் அங்கம்மாள்.  கூட்டம் அதிகமில்லை. வராண்டா மாதிரி காணப்பட்ட ஒரு நீளமான இடத்தில் மகா பெரியவா உட்கார்ந்திருந்தார். மகானுக்கு முன்னால் சுமார் முப்பது பக்தர்கள் அமர்ந்திருந்தார்கள். கண்ணுக்கு நேராகப் பெரியவாளைத் தரிசித்தவுடன் நெகிழ்ந்து போனார் அங்கம்மாள். கன்னங்களில் மாறி மாறி அறைந்து கொண்டு மகானின் திருமுகம் பார்த்தார். அப்போது பெரியவா என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா?
Tags:    

Similar News