செய்திகள்
குழந்தை அபினேஷ்

மாஞ்சா கயிறுக்கு சிறுவன் பலி- காற்றாடி விட்ட 2 பேர் கைது

Published On 2019-11-04 05:36 GMT   |   Update On 2019-11-04 06:44 GMT
சென்னை கொருக்குப்பேட்டையில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் 3 வயது குழந்தை இறந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராயபுரம்:

சென்னையில் மாஞ்சா நூல் காற்றாடி விடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டும் இது தொடர்பாக பலமுறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை போலீசாரும் காற்றாடி விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல முறை எச்சரித்துள்ளனர்.

இந்த நிலையில் சென்னையில் நேற்று மாலை மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கொண்டித்தோப்பில் வசித்து வந்தவர் கோபால். ராஜஸ்தானை சேர்ந்த இவர் அங்குள்ள ஸ்டீல் கம்பெனி ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

மனைவி சுமித்ரா, 3 வயது குழந்தை அபினேஷ் ஆகியோருடன் நேற்று காலை அண்ணாநகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு கோபால் சென்றார்.

மாலையில் மனைவி குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். கொருக்குப்பேட்டை பாரதி நகர் மேம்பாலத்தில் வந்த போது திடீரென மோட்டார் சைக்கிளின் முன்னால் மாஞ்சா கயிறு வந்து விழுந்தது.

இதனால் உஷாரான கோபால் மோட்டார் சைக்கிளை நிறுத்துவதற்குள் அது முன்னால் அமர்ந்திருந்த குழந்தை அபினேசின் கழுத்தில் சிக்கி அறுத்தது. இதில் அபினேசின் கழுத்தில் கத்தியால் அறுத்தது போல பெரிய வெட்டு காயம் இருந்தது. இதனால் ரத்தம் பீறிட்டு வெளியேறியது.

இதைப்பார்த்து கோபாலும், அவரது மனைவி சுமித்ராவும் கூச்சல் போட்டு கதறினார்கள்.

உடனடியாக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு குழந்தையை தூக்கிச் சென்றனர். குழந்தையின் உடலை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதைக் கேட்டதும், கோபாலும், சுமித்ராவும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். ஆஸ்பத்திரி முழுவதும் சோகம் நிலவியது.

இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட ஆர்.கே.நகர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன், வடசென்னை கூடுதல் கமி‌ஷனர் தினகரன் ஆகியோரின் உத்தரவின் பேரில் மாஞ்சா நூல் காற்றாடி விட்டவர்களை பிடிக்க தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டது.

கொருக்குப்பேட்டை பகுதியில் காற்றாடிவிட்டவர்கள் யார் - யார் என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது கொருக்குப்பேட்டை காமராஜர் நகரைச் சேர்ந்த நாகராஜ் என்ற வாலிபரும், சாஸ்திரிநகரைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவனும் காற்றாடிவிட்டது தெரிய வந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மாஞ்சா கயிறு காற்றாடியை அப்பகுதியில் வேறு யாரும் விடுகிறார்களா...? விற்பனை செய்கிறார்களா? என்பது பற்றி நேற்று இரவு முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, காசிமேடு, தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது காசிமேடு ஏ.ஜே. காலனியில் மளிகை கடையில் காற்றாடிகளை விற்பனை செய்த சார்லஸ் என்ற வியாபாரியும் கைது செய்யப்பட்டார்.



அவரது கடையில் இருந்து 16 காற்றாடிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இன்று 2-வது நாளாகவும் காற்றாடி வேட்டை வடசென்னை பகுதியில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு காற்றாடிகளை விற்பனை செய்து கைதானவர்கள் யார் - யார் என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

காற்றாடிவிட்டு கைதான வாலிபர் நாகராஜ் மற்றும் சிறுவனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது மாஞ்சா நூல் எங்கு கிடைத்தது? யாரிடம் வாங்கினீர்கள்? என்பது பற்றி சரமாரியாக கேள்விகளை கேட்டனர். இதற்கு பதிலளித்த அவர்கள் காற்றாடியை நாங்களே தயார் செய்தோம் என்றும், அதற்கு அறுந்து வந்த நூலையே பயன்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரமே தீபாவளி பண்டிகையொட்டி வடசென்னை பகுதியில் மாஞ்சா காற்றாடி பறக்க விடுவது தொடர்பாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக தீவிர சோதனையும் நடைபெற்றது. இதில் தண்டையார்பேட்டை குமரன்நகரை சேர்ந்த லோகநாதன் என்பவர் பிடிபட்டார். அவரிடம் இருந்து 90 காற்றாடிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

போலீஸ் கெடுபிடி காரணமாக மாஞ்சா விற்பனை செய்பவர்கள் தற்போது நேரடியாக விற்பனை செய்வதை குறைத்துள்ளனர்.

ஆன்லைன் மூலமாக காற்றாடிகளை விற்பனை செய்து வருகிறார்கள். எனவே போலீசார் ஆன்லைனில் சட்டவிரோதமாக நடைபெறும் காற்றாடி விற்பனையையும் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News