செய்திகள்
ஈரோடு ஓடைபள்ளம் பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நடந்தபோது எடுத்தபடம்.

ஈரோடு மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது

Published On 2020-11-22 18:25 GMT   |   Update On 2020-11-22 18:25 GMT
ஈரோடு மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
ஈரோடு:

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி 6 வயது முதல் 14 வயதுடைய அனைத்து குழந்தைகளையும் கல்வி கற்க வைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக பள்ளிக்கூடங்கள் செல்லா குழந்தைகள் பற்றிய கணக்கெடுப்பு ஆண்டுதோறும் எடுக்கப்படுகிறது. அதில் பள்ளிக்கூடங்களுக்கு செல்லாத குழந்தைகள் கண்டறியப்பட்டு, அவர்களை பள்ளிக்கூடங்களில் சேர்த்து படிக்க வைக்கவும் அரசு அதிகாரிகள் முயற்சி செய்து வருகிறார்கள்.

இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த கணக்கெடுக்கும் பணி ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் பள்ளிக் கூடங்களுக்கு செல்லாதவர்களை கணக்கெடுக்கும் பணி ஈரோடு மாவட்டத்தில் நேற்று தொடங்கியது. இந்த பணியில் ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள், பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள், அங்கன்வாடி பணியாளர்கள், சுய உதவிக்குழுவினர் உள்பட பலர் ஈடுபட்டு வருகிறார்கள். ஈரோடு பழைய பூந்துறைரோடு ஒடைபள்ளம் பகுதியில் அதிகாரிகள் கணக்கெடுக்கும் பணியில் நேற்று ஈடுபட்டார்கள். அவர்கள் வீடு, வீடாக சென்று 18 வயதுக்கு உள்பட்டவர்கள் உள்ளனரா? அவர்கள் எந்த பள்ளிக்கூடங்களில் சேர்ந்து படிக்கிறார்கள்? எந்த வகுப்பு படிக்கிறார்கள்? முறையாக பள்ளிக்கூடங்களுக்கு செல்கிறார்களா? போன்ற விவரங்களை சேகரித்தனர். இந்த பணி அடுத்த மாதம் (டிசம்பர்) 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
Tags:    

Similar News