ஆன்மிகம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாச்சியார்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் திருவாய்மொழி திருநாள் தொடங்கியது

Published On 2021-01-11 03:56 GMT   |   Update On 2021-01-11 03:56 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பெருமாளுக்கு நடத்தப்படும் விழாக்கள் அனைத்தும் தாயாருக்கும் (ரெங்கநாச்சியார்) நடத்தப்படும்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பெருமாளுக்கு நடத்தப்படும் விழாக்கள் அனைத்தும் தாயாருக்கும் (ரெங்கநாச்சியார்) நடத்தப்படும்.

அதன்படி, உற்சவர் நம்பெருமாள் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிசம்பர் 14-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி கடந்த ஜனவரி 4-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த 5-ந்தேதி முதல் உற்சவர் ரெங்கநாச்சியாருக்கு வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து உற்சவ முதல் நாள் நிகழ்ச்சியுடன் தொடங்கி வருகிற 14-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

இவ்விழாவானது, பகல் பத்து உற்சவம் 5 நாட்களும், ராப்பத்து உற்சவம் 5 நாட்களும் நடைபெறும். கடந்த 5-ந்தேதி முதல் ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்தவாறே பகல் பத்து உற்சவமான இரண்டாயிரம் திருமொழி பாசுரங்களை 5 நாட்கள் தினமும் மாலையில் கேட்டருளினார். ராப்பத்து உற்சவம் எனப்படும் திருவாய்மொழித்திருநாள் நேற்று தொடங்கி வருகிற 14-ந் தேதி வரை நடைபெறுகிறது.

திருவாய்மொழி திருநாளையொட்டி உற்சவர் ரெங்கநாச்சியார் தினமும் மாலை 5.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு திருவாய்மொழி மண்டபத்திற்கு வருவார்.

பின்னர் அலங்காரம் கோஷ்டி வகையறா கண்டருளி அங்கிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.

திருவாய்மொழி திருநாள் உற்சவத்தின் முதல் நாளான நேற்று ரெங்கநாச்சியார் சிறப்பு அலங்காரத்தில் திருவாய்மொழி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
Tags:    

Similar News