உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

பக்கத்து வீட்டு பெண்கள் குளிப்பதை ஆபாசமாக வீடியோ எடுத்து ரசித்த வாலிபர்- போலீசில் பிடித்து கொடுத்த மனைவி

Published On 2022-01-27 07:45 GMT   |   Update On 2022-01-27 07:45 GMT
சென்னையில் பக்கத்து வீட்டு பெண்கள் குளிப்பதையும் அவர்களின் ஆபாச அசைவுகளையும் வாலிபர் ஒருவர் வீடியோ எடுத்து ரசித்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவொற்றியூர்:

சமூக வலைதளங்களிலும், செல்போனிலும் ஆபாச வீடியோக்களை பார்த்து ரசிக்கும் பழக்கம் இன்றைய இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது.

இதன் காரணமாகவே பல்வேறு பாலியல் குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

இதையடுத்து சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோக்கள் பரவுவதை தடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு அறிவுரை வழங்கி உள்ளது. அது தொடர்பாக போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

சமூக வலைதளங்களில் தொழில் ரீதியாக எடுக்கப்படும் ஆபாச படங்களுடன் சாதாரண பெண்களின் படங்களும், வீடியோக்களும் பரவி வருகிறது. இதனை போலீசாரால் முழுமையாக தடுத்து நிறுத்த முடியவில்லை.

குறிப்பாக சமூக வலைதளங்களில் பெண்களுக்கு தெரியாமல் எடுக்கப்படும் ஆபாசமான வீடியோக்கள், குளியல் காட்சிகள் ஆகியவை ஆக்கிரமித்துள்ளன. இந்த வீடியோக்களை எடுக்கும் மர்மநபர்கள் அதனை வக்கிர எண்ணத்துடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறார்கள்.

இதுபோன்ற நபர்கள் மீது போலீசாரும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில் சென்னையில் பக்கத்து வீட்டு பெண்கள் குளிப்பதையும் அவர்களின் ஆபாச அசைவுகளையும் வாலிபர் ஒருவர் வீடியோ எடுத்து ரசித்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் தனது காதல் மனைவியுடன் வசித்து வருபவர் சேகர். தனியார் இன்சுரன்ஸ் நிறுவனத்தில் இவர் வேலை பார்த்து வருகிறார். திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை.

இந்த நிலையில் சேகருக்கு பக்கத்து வீட்டு பெண்கள் குளிப்பதையும், அவர்களின் அங்க அசைவுகளையும் படம் பிடித்து பார்க்கும் ஆசை ஏற்பட்டது. இதையடுத்து அவர் கடந்த சில நாட்களாக தனது செல்போன் மூலம் பெண்களின் ஆபாச வீடியோக்களை அவர்களுக்கு தெரியாமல் செல்போனில் பதிவு செய்துள்ளார்.

இப்படி வக்கிர எண்ணத்துடன் செயல்பட்ட சேகர் தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் குளிப்பதையும் படம் பிடித்துள்ளார்.

இதுகுறித்து அந்த பெண் சேகரின் மனைவியிடம் புகார் தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கணவரின் நடவடிக்கைகளை கண்காணித்தார்.

இதையடுத்து கணவர் சேகர் தூங்கிக் கொண்டிருந்த போது அவருக்கு தெரியாமல் அவரது செல்போனை எடுத்து ஆய்வு செய்தார்.

அப்போது சேகரின் செல்போனில் ஆபாச வீடியோக்கள் பல இருந்துள்ளது. இதனை பார்த்து அவர் மேலும் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக கணவரின் செயலுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என நினைத்தார்.

இதையடுத்து கணவர் சேகரை அவர் போலீசில் பிடித்துக் கொடுத்தார். இது தொடர்பாக திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் ஷீலாமேரி விசாரணை நடத்தினார்.

கணவரை பிடித்து கொடுத்ததுடன் அவரது செல்போனையும் சேகரின் மனைவி போலீசாரிடம் ஒப்படைத்தார்.

அதனை போலீசார் போட்டு பார்த்தனர். அப்போது பெண்களின் ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள் அதில் இருந்தன. பக்கத்து வீட்டு பெண்கள் குளிப்பது மட்டுமின்றி அவர்கள் வாசலில் கோலம் போடுவது உள்ளிட்ட ஆபாச வீடியோக்களையும் சேகர் தனது செல்போனில் பதிவு செய்து இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த ஆபாச வீடியோக்களை தனது வீட்டில் வைத்து யாருக்கும் தெரியாமல் சேகர் பார்த்து ரசித்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சேகர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தனது கணவர் சேகர் செய்த குற்றத்தை பொறுத்துக்கொள்ளாமல் அவரை துணிச்சலாக போலீசில் பிடித்துக் கொடுத்த சேகரின் மனைவியை போலீசார் பாராட்டினார்கள்.

சேகர் வசித்து வந்த பகுதியில் பெண்கள் மத்தியில் இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்கள் சேகர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News