பெண்கள் உலகம்
உங்கள் மீது ஈர்ப்பை அதிகரிக்கும் பழக்கவழக்கங்கள்

உங்கள் மீது ஈர்ப்பை அதிகரிக்கும் பழக்கவழக்கங்கள்

Published On 2022-02-25 06:22 GMT   |   Update On 2022-02-25 08:58 GMT
உங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை முக்கியமானது. அதை நீங்கள் வெளிப்படுத்தும் விதமே உங்கள் மீதான நன்மதிப்பை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
‘ஆள் பாதி; ஆடை பாதி’ எனும் பழமொழிக்கு ஏற்றவாறு, பிறரிடம் நமக்கான மதிப்பு நமது தோற்றத்தையும், பழக்கவழக்கங்களையும் பொறுத்தே அதிகரிக்கிறது. அந்தவகையில் உங்கள் மீது ஈர்ப்பை அதிகரிக்கும் சில பழக்கவழக்கங்கள் குறித்து பார்க்கலாம்.

ஆடையில் கவனம் செலுத்துங்கள்:

அலுவலகம், நண்பர்களுடன் வெளியே செல்வது, விசேஷ காலங்கள் என அந்தந்த சூழ்நிலை மற்றும் சந்திக்கும் நபர்களுக்கு ஏற்றவாறு ஆடைகளைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் மீதான நேர்மறை எண்ணத்தை அதிகரிப்பதில் ஆடைக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. எனவே அதற்காக சிறிது நேரம் ஒதுக்குவதற்கு எப்போதுமே தயங்காதீர்கள்.

சுத்தம்:

குளிப்பது, நறுமண திரவியங்கள் உபயோகிப்பது, நகங்களை சுத்தமாக வைத்துக் கொள்வது, உடைக்கேற்றவாறு வசதியான, சரியான காலணிகளை தேர்ந்தெடுத்து அணிவது போன்றவை மிக முக்கியமானது. இது உங்கள் மீதான மதிப்பை அதிகரிக்கும்.

நட்பு வட்டத்தை பெரிதாக்குங்கள்:

தொழில் சார்ந்தும், பொதுவாகவும் உங்களது நட்பு வட்டத்தை பெரிதாக்கிக் கொள்ளுங்கள். புதிய நட்புகளும், புதிய மனிதர்களின் அறிமுகமும் உங்களுக்கு நிறைய புதிய வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கும் என்பதை மறவாதீர்கள்.

புதியவர்களை சந்திக்கும்போது முகத்தில் புன்சிரிப்புடன் இனிமையாக பழகுங்கள். சூழ்நிலையை அனுசரித்து மகிழ்ச்சியாக இருங்கள். உங்கள் பேச்சுத்திறனை வளர்த்துக் கொள்வதும் இதில் அடங்கும்.

தன்னம்பிக்கை முக்கியம்:

உங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை முக்கியமானது. அதை நீங்கள் வெளிப்படுத்தும் விதமே உங்கள் மீதான நன்மதிப்பை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பேச்சில் கவனம்:

எந்த இடத்தில், என்ன பேசுகிறோம் என்பது முக்கியமானது. புதிதாக ஒருவரை சந்திக்கும்போது உங்களைப் பற்றிய சிறு அறிமுகத்துக்கு பின்பு, அவரை பற்றிய நேர்மறையான விஷயங்களை குறிப்பிடுங்கள். அது புதியவர்களுக்கு இன்னும் எளிதாக உங்களுடன் நட்பை பலப்படுத்திக் கொள்ள உதவும். அதேபோல சூழ்நிலைக்கு ஏற்றாற்போல சிரித்து பேசுவதும், கோபத்தை தவிர்ப்பதும் முக்கியம். பேசுவது எவ்வளவு முக்கியமோ அதை விட பிறர் சொல்வதை கவனிப்பதும் அவசியமானது.
Tags:    

Similar News