வழிபாடு
மாதேஸ்வரன் மலை கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்ற போது எடுத்த படம்.

கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலை கோவிலில் தேரோட்டம்

Published On 2022-03-04 08:31 GMT   |   Update On 2022-03-04 08:31 GMT
கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலை கோவிலில் நேற்று தேரோட்டம் நடந்தது. திருத்தேரில் ஸ்ரீமலை மாதேஸ்வர சாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் மாதேஸ்வரன் மலையில் ஸ்ரீமலை மாதேஸ்வர கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று மகா தேரோட்டம் நடந்தது. மகா தேர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. திருத்தேரில் ஸ்ரீமலை மாதேஸ்வர சாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேர் கோவிலின் வெளிபிரகாரத்தை சுற்றி வர, கூடியிருந்த பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினர். மேலும் சில பக்தர்கள் வாழைப்பழத்தில் மரிக்கொழுந்தை சொறுகி, அதனை மகா தேர் மீது வீசி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மகா தேருக்கு முன்பாக ருத்திராட்ச தேர், பசு தேர், புலி தேர் ஆகியன கோவிலை சுற்றி வலம் வந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்த திருவிழாவையொட்டி 50-க்கும் மேற்பட்ட தமிழக, கர்நாடக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் தமிழக, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News